கிரிக்கெட்

மிர்புர் போட்டியில் த்ரில் வெற்றி... இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்

Published On 2022-12-07 14:35 GMT   |   Update On 2022-12-07 16:59 GMT
  • கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார்.
  • 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.

மிர்புர்:

வங்காளதேசம் மற்றம் இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்தது. மெகிடி ஹசன் மிராஸ் சதம் அடித்தார். மஹ்முதுல்லா 77 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி (5 ரன்), ஷிகர் தவான் (8 ரன்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி 82 ரன்கள் விளாசினார். அக்சர் பட்டேல் 56 ரன்கள் சேர்த்தார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் போதிய ரன்ரேட்டை எட்டவில்லை.

கடைசி நேரத்தில் போராடிய கேப்டன் ரோகித் சர்மா, பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விரட்டி வெற்றியை நெருங்கினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோகித் இலக்கை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடுமையாக போராடிய அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களே எடுத்தது. இதனால் வங்காளதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-0 என கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் எபடோட் உசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மெஹிடி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் அசன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

Tags:    

Similar News