கிரிக்கெட்

விராட் கோலி அபாரம்... பாகிஸ்தானுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Published On 2022-09-04 15:51 GMT   |   Update On 2022-09-04 15:51 GMT
  • டி20 போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் என்ற சாதனையை எட்டினார் ரோகித் சர்மா
  • நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

துபாய்:

2022 ஆசியக் கோப்பை டி20 போட்டியின் முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச முடிவு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்தார். அத்துடன், டி20 போட்டிகளின் வரலாற்றில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

இதேபோல் மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுலும் 28 ரன்கள் விளாசினார். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, தீபக் ஹூடா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி 60 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரவி பிஷ்னோய் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாச, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. ரவி பிஸ்னோய் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 2 விக்கெட் எடுத்தார். நயீம் ஷா, முகமது உசைன், ஹரிஸ் ரவுப், முகமது நவாஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. 

Tags:    

Similar News