சினிமா செய்திகள்

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.. மும்பையில் பரபரப்பு

Published On 2026-02-01 10:48 IST   |   Update On 2026-02-01 10:48:00 IST
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் ரோகித் ஷெட்டி வீட்டிற்குள்ளேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீட்டின் முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் ஷெட்டி இந்தியில் சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆவார்.

மும்பையின் ஜுஹு பகுதியில் உள்ள ரோகித் ஷெட்டியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, நேற்று நள்ளிரவு சுமார் 12:45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த கட்டிடத்தை நோக்கி சுமார் 4 முதல் 5 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் ரோகித் ஷெட்டி வீட்டிற்குள்ளேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த போலீசார் மற்றும் தடவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர்.

அந்தப் பகுதியில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏற்கனவே பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் இத்தகைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், தற்போது ரோகித் ஷெட்டி இலக்கு வைக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News