சினிமா செய்திகள்

நான் சினிமாவை விட்டு விலக விஜய் தான் காரணம் -நடிகை ரோஜா

Published On 2025-10-26 08:04 IST   |   Update On 2025-10-26 08:04:00 IST
  • விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார்.
  • யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக, படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். சமீபத்தில் படங்களில் நடிக்காதது பற்றி நடிகை ரோஜா தெரிவித்துள்ள கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோஜா அளித்த பேட்டியில், "நடிகர் விஜய்யுடன் 'நெஞ்சினிலே' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். அப்போது விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார். சில வருடங்கள் கழித்து, அவரது நடிப்பில் 'காவலன்' படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன்.

அந்தப் படப்பிடிப்பில் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், 'மேடம்.. நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா?. படக்குழுவில் சொன்னபோது, அவர்கள் சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்தேன். நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம்' என்று கூறினார்.

விஜய் மட்டுமல்ல தெலுங்கில் நடிகர் கோபிசந்துக்கு மாமியாராக நடித்தபோது, அவரும் இதே விஷயத்தைக் கூறினார். அதனால் தான் நான் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கினேன். 'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்ததுபோல ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், மீண்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News