சினிமா

சாயிஷாவுடன் காதல் வலையில் சிக்கிய ஆர்யா

Published On 2019-01-07 05:20 GMT   |   Update On 2019-01-07 05:20 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், வெளிநாட்டில் காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. #Arya #Sayyeshaa
தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார் ஆர்யா. 2005-ல் `அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசப்பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். 

ஆர்யாவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. கடந்த வருடம் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். இறுதி போட்டிக்கு 3 பெண்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், யாரையும் திருமணம் செய்யாமல் விலகி விட்டார். ஒருவரை மணந்தால் மற்ற இருபெண்கள் மனது புண்படும் என்று காரணம் சொன்னார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார்.



இந்த நிலையில், ஆர்யாவுக்கும் - நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கின்றனர்.

ஆர்யா - சாயிஷா இருவரும் தற்போது சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடப்பதால், இருவரும் அங்கு காதலை வளர்த்ததாகவும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. ஆர்யாவோ, சாயிஷா தரப்போ இதனை உறுதிப்படுத்தவில்லை. #Arya #Sayyeshaa

Tags:    

Similar News