சினிமா

முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Published On 2018-12-12 10:31 GMT   |   Update On 2018-12-12 10:31 GMT
சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. #Sarkar #ARMurugadoss
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு பின்னர் வெளியானது. 

படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளும் நீக்கப்பட்டன. 

இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் முருகதாசுக்கு எதிராக புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முருகதாசுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான எப்.ஐ.ஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவராஜனிடம் பிரபலமானவர்கள் செய்தால் அது தவறு; பிரபலம் இல்லாதவர்கள் செய்தால் அது தவறில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். #Sarkar #ARMurugadoss
Tags:    

Similar News