தனுசு - தமிழ் மாத ஜோதிடம்

2026 மாசி மாத ராசிபலன்

Published On 2026-02-12 12:30 IST   |   Update On 2026-02-12 12:32:00 IST

தலைமை பதவியை விரும்பும் தனுசு ராசியினரே!

தனுசு ராசிக்கு பாக்கிய அதிபதியான சூரியன் மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார். இது வெற்றி மேல் வெற்றியை தரக்கூடிய காலமாகும்.தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் பெயறுவார்கள். வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும்.உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும்.தந்தையின் ஆலோசனைகளால் பயன் உண்டு.

பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும்.அவர்களின் முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்யலாம். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பத்திரப்பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். சொத்து வாங்குவது, விற்பது, திருமணம் போன்ற முக்கிய முடிவுகளை ஒத்திப் போடவும். பொருளாதாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும்.கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள்.

கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்தால் மன அமைதி கூடும். மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும்.

வெளிநாட்டு, அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் ஏதாவது செலவு இருந்து கொண்டே இருக்கும். வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆயுள் பயம் அகலும். பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். இது கிரகண மாதம் என்பதால் மாசி மாதம் முழுவதும் சனிக்கிழமை முன்னோர்களை வழிபட அனைத்தும் நற்பலன்களும் அதிகாரிக்கும்.

பொருளாதாரம்

ஒப்பந்தம் அடிப்படையான தொழில்,கமிஷன் அடிப்படையான தொழில்கள் இவர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். யூட்யூப், இன்ஸ்டாகிராம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் இவர்களுக்கு பல மடங்கு வருமானத்தை கொடுக்கும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும்.ஜாமீன் கடன் இ.எம்.ஐ சார்ந்த பிரச்சினைகள் ஜாதகரின் வாழ்வை கேள்விக்குறியாக்கும்.

கடன் வாங்கி சுயதொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது.சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்துகள் வாங்குவார்கள். பணக்கவலை குறையும் பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.

முதலீட்டாளர்கள்

அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நிலவி வந்த எதிர்ப்புகள் விலகும்.மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.

உத்தியோகஸ்தர்கள்

திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். துன்பங்களும் துயரங்களும் முடிவுக்கு வரப்போகிறது. தன யோகம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் நிம்மதி கூடும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேலைக்காக சிலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். அரசு வேலை அரசாங்க பதவி போன்றவைகளும் கிடைக்கும். சுய ஜாதக பலனை சரி பார்க்காமல் தேவையில்லாமல் வேலை மாற்றம் செய்யகூடாது. அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் வந்து சேர உத்தரவு வரும்.

பெண்கள்

அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் சர்ச்சைகள் விலகும். லாப ஸ்தான பலத்தால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும். வழக்குகளில் வெற்றி உறுதி. பயணங்கள் மிகுதியாகும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திரம் உருவாகும்.

பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.கணவன், மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும்.ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். காரியத்தடை, மன சஞ்சலம் குறையும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். பணவரவு, வருமானம் கூடும்.

சூரிய கிரகணம்

மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. தனுசு ராசிக்கு 3ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சூரிய கிரகணம் ஏற்பட போகிறது.தகவல் தொடர்பு சாதனங்களான பேஸ்புக் யூ டியூப் இன்ஸ்டாகிராம்,பத்திரிக்கை துறை எழுத்துத் துறையினரின் வாழ்வாதாரம் உயரும். இந்த நாளில் ஜாமீன் போடுவது தேவையற்ற வெளியூர் பயணங்கள்,முக்கிய ஒப்பந்தங்கள், சிற்றின்பம் இவைகளை தவிர்த்தால் நன்மைகள் மிகுதியாகும்.

பாகப்பிரிவினை சார்ந்த விஷயங்களில் உடன் பிறந்தவர்களால் மன உளைச்சல் ஏற்படும் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும் யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதத்தை பெற்றுத்தருவார். இளைய சகோதரன் சகோதரி போன்றவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் உங்களுக்கு உயர்வு உண்டாகும்.

சந்திர கிரகணம்

மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். தனுசு ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. செய்த தர்மம் தலை காக்கும். சாதிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். தடை பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும்.

தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். ஆன்மீக, வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் சென்று வரும் சந்தர்ப்பம் உருவாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள்.உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை, முயற்சி நடக்கும். ஞாபக சக்தி குறைவு சீராகும். காது, மூக்கு தொடர்பான அறுவை சிகிச்சை நடக்கும்.நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டும். தந்தையின் ஆரோக்கியத்தில் விழிப்பு தேவை.

பரிகாரம்

மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News