என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

சோசியல் மீடியா
சமூக வலைதளங்களுக்கு தடை- ரஷியா அதிரடி உத்தரவு
ரஷியாவில் சுமார் 6.6 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். ரஷிய அரசின் இந்த அறிவிப்பால் அந்த நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பு 12 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷியாவை தனிமைப்படுத்துவதற்காக கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கு அந்நாட்டில் கட்டுப்பாடுகளை விதித்தன.
ஃபேஸ்புக் நிறுவனத்தை பொறுத்தவரை, ரஷியாவில் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் செய்வதற்கும், அதன்மூலம் வருமானம் பெறுவதற்கும் தடை விதித்தது. கூகுள் நிறுவனமும், ரஷிய நாட்டின் அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் தங்கள் இணைய சேவைகள் மூலம் வருமானம் பெறுவதை தடை செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் விதித்தது.
இவ்வாறு பெரும் நிறுவனங்கள் ரஷிய மக்கள் தங்கள் சேவையை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், ரஷிய அரசு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதங்கள் இயங்குவதற்கு முழுதாக தடை விதித்துள்ளது.
மேலும் ரஷிய ராணுவம் குறித்து வதந்தி பரப்புவோர்களுக்கு 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும்படி சட்டத்தில் வழிவகை செய்யப்படும் என்றும் ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
ரஷியாவில் சுமார் 6.6 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். ரஷிய அரசின் இந்த அறிவிப்பால் பேஸ்புக்குக்கு நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு ரஷிய மக்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Next Story