search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெல்பேஜ் இந்தியா"

    • முதுமை காலத்தில் ஆண்களைவிட பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
    • உடல்ரீதியான வன்முறை 52 சதவீதமும், வார்த்தை வன்முறை 51 சதவீதமும் நிகழ்த்தப்படுகிறது.

    சென்னை:

    உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு "ஹெல்பேஜ் இந்தியா" தயாரித்த 'பெண்கள் மற்றும் முதுமை: அறியாமையா அல்லது அதிகாரமா' என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

    அப்போது வெளி அறிக்கையில் வெளியிடப்பட்ட குறிப்பிட்டுள்ளதாவது:-

    இந்தியாவில் பாலின விகிதம் 948/1000. ஆனால், முதியோருக்கான பாலின விகிதம் 1065/1000. இதன்மூலம் முதுமைப்பருவத்தில் பெண்களே அதிகம் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    முதுமை காலத்தில் ஆண்களைவிட பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர்.

    இந்திய மக்கள் தொகை 2021-ன் படி பெண்கள் 66 கோடிபேர் உள்ளனர். இதில் வயதான பெண்கள் 7 கோடி பேர் உள்ளனர். 2031-ல் மக்கள் தொகையில் 72 கோடி பெண்கள் இருப்பார்கள். இதில் வயதான பெண்கள் 10 கோடிக்கும் மேல் இருக்க வாய்ப்புள்ளது.

    54 சதவீத பெண்கள் இன்றளவும் கல்வியறிவில்லாமல் உள்ளனர். 75 சதவீதப் பெண்கள் எந்த சேமிப்பும் இல்லாமலும், 66 சதவீதப் பெண்கள் எவ்வித சொத்துகளும் இல்லாமல் பொருளாதார ரீதியாக பிறரை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர்.

    தமிழகத்தைப் பொருத்தவரை வயதான பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. உடல்ரீதியான வன்முறை 52 சதவீதமும், வார்த்தை வன்முறை 51 சதவீதமும் நிகழ்த்தப்படுகிறது. இது போன்ற வன்முறைகளை பாதிக்கப்பட்டவரின் மகன் 33 சதவீதமும், உறவினர்கள் 33 சதவீதமும், 12 சதவீதம் மருமகள்களும் நிகழ்த்துகிறார்கள்.

    பாதிக்கப்பட்ட வயதான பெண்களில் 20 சதவீதம் பேர் தங்களுக்கான சட்டங்கள் மற்றும் குறைதீர் மையங்கள் குறித்த விழிப்புணர்வின்றி காணப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.விமலா வெளியிட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை போலீஸ் கமிஷனர் பெற்றுக் கொண்டார்.

    ×