search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெராத்"

    இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் டெஸ்டின் நான்காவது இன்னிங்சில் 12 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி உச்சத்தில் உள்ளார். #SLvSA #Herath
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பில் கடந்த 20-ந்தேதி முதல் நேற்று (23-ந்தேதி) வரை நடைபெற்றது. நான்கு நாட்களிலேயே முடிந்த இந்த டெஸ்டில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    490 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 113 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 6-வது விக்கெட்டுக்கு டி ப்ரூயின் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சாளர்களை விரக்தியடையச் செய்தது. 4-வது நாள் காலை முழுவதும் நிலைத்து நின்று விளையாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் ஹெராத் இந்த ஜோடியை பிரித்தார். பவுமா 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 123 ரன்கள் குவித்தது.

    பவுமா விக்கெட் வீழந்ததும் டி காக் 8, ஸ்டெயின் 6, ப்ரூயின் (101) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார். அத்துடன் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இவரது சிறப்பான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 290 ரன்னில் சுருண்டது.



    இந்த போட்டியின் கடைசி இன்னிங்ஸ்-ஆன 4-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹெராத் 34 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 12 முறை நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி எந்த பந்து வீச்சாளரும் எட்ட முடியாத உச்சத்தில் உள்ளார்.

    சுழற்பந்து ஜாம்பவான்களான முரளீதரன் மற்றும் வார்னே ஆகியோர் தலா 7 முறைதான் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 6 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    கொழும்பில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்டில் இலங்கை 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 20-ந்தேதி கொழும்பு தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தது. மகாராஜ் 9 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

    ஒட்டுமொத்தமாக 489 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    இமாலய ஸ்கோரை சேஸிங் செய்யும் நோக்கத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. டி ப்ரூயின் 45 ரன்னுடனும், பவுமா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்னும் ஐந்து விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் இருப்பதால், 4-வது நாள் ஆட்டத்தில் விரைவில் ஆல்அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் ப்ரூயின், பவுமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ப்ரூயின் அரைசதம் அடித்தார்.



    இந்த ஜோடி ஹெராத், தில்ருவான் பெரேரா, தனஞ்ஜெயா சுழற்பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டது. இதனால் இலங்கை வீரர்கள் விரக்தியடைந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் இந்த ஜோடி பிரிந்தது.

    பவுமா 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி காக் 8 ரன்னில் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அத்துடன் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. 7 விக்கெட் வீழ்ந்ததால் இலங்கை வெற்றியை நோக்கி சென்றது.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய டி ப்ரூயின் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபாடா 18 ரன்னிலும், ஸ்டெய்ன் 6 ரன்னிலும் வெளியேற தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



    இதனால் தென்ஆப்பிரிக்கா 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெராத் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. இலங்கை தொடக்க பேட்ஸ்மேன் கருணாரத்னே ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 
    காலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. #SLvSA #Perera
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்றுமுன்தினம் (12-ந்தேதி) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை கருணாரத்னேயின் (158 அவுட்இல்லை) அபார சதத்தால் 287 ரன்கள் குவித்தது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டு பிளிசிஸை (49) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 161 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 161 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    முதல் இன்னிங்சில் சதம் அடித்த கருணாரத்னே 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடினார். அவர் 60 ரன்கள் எடுத்தார். இவரது அரைசதத்தால் இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ் சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகாராஜ் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 351 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் 352 ரன்கள் வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்கா அணிக்கு நிர்ணயித்தது இலங்கை.



    காலே மைதானத்தில் 352 ரன்கள் என்பது இமாலய இலக்காகும். இந்த இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ஆனால் தில்ருவான், ஹெராத் சுழற்பந்து வீச்சில் சிக்கி தென்ஆப்பிரிக்கா 73 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை 278 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தில்ருவான் 6 விக்கெட்டும், ஹெராத் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் 20-ந்தேதி தொடங்குகிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஹெராத் அறிவித்துள்ளார். #SLvSA
    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ரங்கணா ஹெராத். 40 வயதாகும் இவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999-ம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணியில் அறிமுகமான இவர், முரளீதரனால் அதிக போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை.

    முரளீதரன் ஓய்வு பெற்றதும் இலங்கை அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். 71 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹெராத் 2015-ல் ஒருநாள் போட்டியிலும் இருந்தும், 2016-ல் டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்பின் நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. அத்துடன் சர்வதேச போட்டிகளை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.



    இதுகுறித்து ரங்கணா ஹெராத் கூறுகையில் ‘‘இந்த வருட இறுதியில் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் என்னுடைய கடைசி தொடராக இருக்கலாம். நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் இங்கிலாந்து தொடருக்கு சுமார் மூன்று மாதங்கள் இருக்கிறது. தற்போது நான் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறேன்.

    கிரிக்கெட்டிற்கு வரும் ஒவ்வொரு வீரரும் அவர்களது ஆட்டத்தை நிறுத்தியாக வேண்டியதற்கான நேரம் வரும். அதற்கான நேரம் எனக்கு வந்து விட்டதாக கருதுகிறேன்’’ என்றார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் டெஸ்ட் போட்டியில் 418 விக்கெட்டுக்கள் குவித்துள்ளார்.
    ×