search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வார்டன்"

    சேலத்தில் முன்னாள் சிறை வார்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய சொகுசு காரை கடந்த ஜூன் மாதம் அய்யம்பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்த சிறை வார்டன் மாதேஸ் (வயது 28), அவருடைய நண்பர் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக எரித்துள்ளனர். மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் நரசோதிப்பட்டியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவருடைய சொகுசு காரையும் மாதேஸ், விக்னேஷ் ஆகியோர் எரித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே மாதேஸ் சிறை வார்டனாக பணி புரிந்துக்கொண்டு குற்றங்களில் ஈடுபட்டதற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த மாதேஸ் கடந்த டிசம்பர் மாதம் தனது கூட்டாளிகளுடன் இரும்பாலை பிரிவு ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் அந்த வழியாக வந்த நாமக்கல் மாவட்டம் களங்காணியை சேர்ந்த ரங்கசாமி என்பவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஒரு பவுன் நகை, ரூ.1,200 மற்றும் கைகெடிகாரத்தை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சூரமங்கலம் போலீசார் மாதேஸ், கார்த்திக், சத்தியநாராயணா ஆகியோரை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த முன்னாள் சிறை வார்டன் மாதேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சூரமங்கலம் போலீசார் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று மாதேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள மாதேசிடம் போலீசார் வழங்கினார்.
    புழல் சிறையில் பாக்ஸர் முரளி என்ற கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமை வாடர்ன் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் முரளி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒரு முறை முரளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பாஸ்கர் முரளிக்கும், சக கைதிகளுக்கும் இடையே 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மோதலில் பாஸ்கர் முரளி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கர் முரளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புழல் சிறையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக புழல் சிறை தலைமை வாடர்ன் நாகராஜ் மற்றும் சிறை உதவியாளர் பழனிவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. 
    கோவை ஜெயிலில் கைதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பணியில் இருந்த 2 வார்டன்களை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    கோவை:

    கோவை பீளமேடை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் அடிதடி வழக்கில் கடந்த மாதம் 5-ந் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பேரூர் பரட்டையம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்(19). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கடந்த 25-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    ரமேஷ் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. டாக்டர்கள் அறிவுரைப்படி தினமும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். விஜய் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மருந்து சாப்பிட்டு வருகிறார். விசாரணை கைதிகளான இருவரும் கோவை மத்திய ஜெயிலில் 3-வது பிளாக்கில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று மதிய உணவுக்காக கைதிகள் திறந்து விடப்பட்டனர்.

    அப்போது கழிவறை சென்று விட்டு வந்த விஜய், ரமேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முடிந்த பின் ரமேஷ் 3-வது பிளாக் அருகே திண்ணையில் படுத்திருந்தார். அங்கு சென்ற விஜய் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து ரமேசை தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜெயில் ஊழியர்கள் ரமேசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்தார்.

    இதுகுறித்து ஜெயிலர் தர்மலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக ஜெயிலுக்குள் சென்ற போலீசார் சக கைதிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சிறை ஊழியர்கள், சக கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயிலில் கைதிகளுக்குள் நடந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சிறைத்துறை டி.ஐ.ஜி. அறிவுடைநம்பி உத்தரவிட்டார். அதன்பேரில் ஜெயில் சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.

    மோதல் சம்பவம் நடந்த போது தலைமை வார்டன் முனுசாமி (49), வார்டன் ஆதி கருப்பசாமி(27) ஆகியோர் 3-வது பிளாக்கில் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தததாக கூறி இருவரையும் சஸ்பெண்டு செய்து எஸ்.பி. செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மத்திய ஜெயிலில் மொத்தம் 1768 கைதிகள் உள்ளனர். இதில் விசாரணை கைதிகள் 807 பேர் ஆவர். நேற்றைய சம்பவத்தில் ரமேசுக்கும், விஜய்க்கும் இடையே முன்விரோதம் எதுவும் இல்லை. விஜய் கழிவறை சென்று விட்டு திரும்பிய போது ரமேஷ் அவரது தாயாரை பற்றி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

    இதனால் விஜய் ஆவேசமடைந்து ரமேசை தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே, மோதல் சம்பவத்தை தொடர்ந்து கோவை மத்திய ஜெயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. #tamilnews
    ×