search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூத்த கைதிகள்"

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, பாதி தண்டனை காலத்தை கழித்த மூத்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #MahatmaGandhi #BirthdayAnniversary
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, மூத்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு திட்டம் ஒன்றை கொண்டு வந்து அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஆண் கைதிகளுக்கு 60 வயதும், பெண் கைதிகளுக்கு 55 வயதும் முடிந்து இருக்க வேண்டும். மொத்த தண்டனை காலத்தில் பாதியளவை அனுபவித்து முடித்து இருக்க வேண்டும்.

    * வரதட்சணை சாவு, கற்பழிப்பு, ஆட்கடத்தல், பொடா, தடா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் (பெமா), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள், இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

    * போதைப்பொருள் தடுப்புச்சட்டம், லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பொது மன்னிப்பு திட்டம் பொருந்தாது. அவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு இல்லை.

    * 70 சதவீத உடல் ஊனத்துடன் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாதி தண்டனைக் காலத்தை கழித்து இருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள். மீள முடியாத நோய் தாக்கியவர்கள், மூன்றில் ஒரு பங்கு தண்டனையை கழித்திருந்தால் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.

    * மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும், மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

    * 3 கட்டங்களாக இந்த பொது மன்னிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு மூத்த கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக வரும் அக்டோபர் 2-ந் தேதியும், 2-வது கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதியும் (சம்பரண் சத்தியாகிரக இயக்க நினைவு நாள்), 3-வது கட்டமாக அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

    * மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை கடிதம் அனுப்பி வைக்கும். அவை ஒரு கமிட்டி அமைத்து தகுதியான நபர்களை தேர்வு செய்து, கவர்னருக்கு அனுப்பி அரசியல் சாசனம் பிரிவு 161-ன் கீழ் அவரது ஒப்புதல் பெற்று, கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. #MahatmaGandhi #BirthdayAnniversary #tamilnews 
    ×