search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் வாக்குமூலம்"

    கள்ளநோட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட பெண் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கடன் தொல்லையால் கள்ளநோட்டு அச்சு அடித்ததாக கூறியுள்ளார். #FakeCurrency #arrest

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் வனிதா (வயது 30).

    இவர் நேற்று முன்தினம் அமைந்தகரை மேத்தாநகர் ரெயில்வே காலனி 3-வது தெருவில் உள்ள மருந்துக் கடையில் 2000 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றார்.

    அப்போது மருந்து கடை ஊழியர்களும், அக்கம் பக்கத்தினரும் வனிதாவை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வனிதாவை கைது செய்து விசாரணை நடத்தினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொளத்தூரை சேர்ந்த சத்தியலட்சுமி என்ற பெண்ணையும் கைது செய்தனர்.

    சத்தியலட்சுமி வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி கள்ளநோட்டு தயாரித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளநோட்டு வழக்கில் கைதான வனிதா போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

    நானும் சத்யலட்சுமியும் கடந்த 2006-ம் ஆண்டு அண்ணா நகரில் உள்ள துணிக் கடை ஒன்றில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம்.

     


    பிறகு சத்யலட்சுமி திருமணம் முடிந்து மாதவரம் பகுதியில் குடியேறிவிட்டார். அதன்பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. அவரது கணவர் அமெரிக்காவில் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவது வழக்கம்.

    நான் பின்னர் சேலை, பெட்ஷீட் மற்றும் தலையணை வியாபாரம் செய்து வந்தேன். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் பிரச்சினையால் தவித்து வந்தேன்.

    எனது தாய் அண்ணா நகர் சாந்தி காலனி பகுதியில் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தோம்.

    இந்த நிலையில் தான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யூடியூப் மூலம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் வீடியோ ஒன்றை பார்த்தேன்.

    இதுகுறித்து சத்யலட்சுமியிடம் கலந்து ஆலோசித்து அவரிடம் இருந்து பண உதவி பெற்று ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து நோட்டு அச்சடிக்கும் மெஷின்கள் வாங்கினேன்.

    பின்னர் சத்யலட்சுமி மூலம் அவர் வசித்து வரும் வீட்டின் அருகில் 18-வது குறுக்கு தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக குடியேறினேன்.

    கடந்த 10 நாட்களாக ரூபாய் நோட்டு அச்சிட்டு வந்தேன். தினமும் நானும் சத்யலட்சுமியும் ஆளுக்கொரு சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்று பணத்தை மாற்றி செலவு செய்து வந்தோம்.

    நேற்று முன்தினம் மேத்தா நகர் மெடிக்கல் கடையில் நோட்டை மாற்றும் போது நான் சிக்கிவிட்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார். #FakeCurrency #arrest

    கள்ளக்காதலை கண்டித்ததால் கோழிக்கறியில் வி‌ஷம் கலந்து சகோதரர்களை கொன்றதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்தாட்சி மடத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் அய்யப்பன் (வயது22).

    இவர் தனது நண்பர்கள் காமராஜர் காலனி கணேசன், வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த செய்யது இப்ராகிம் ஷா என்ற ஜம்பு (22), லிங்காபுரம் காலனி கவுதம் (15) மற்றும் சிலருடன் அங்குள்ள சிறுகுளம் கண்மாய் கரையில் மது அருந்தி உள்ளார்.

    பட்டாசு ஆலை தொழிலாளர்களான இவர்கள் விடுமுறை நாளில் ஒன்றாக கூடி மது அருந்துவது வழக்கம். நேற்று மது அருந்திய சிறிது நேரத்தில் கணேசன் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்குள் மேலும் 3 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

    அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கணேசன், செய்யது இப்ராகிம் ஷா என்ற ஜம்பு, கவுதம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    அவர்களுடன் மது அருந்திய அய்யப்பன், ஜனார்த்தனன் (14), சரவணக்குமார் (23), அரிகரன் என்ற அந்தோணி (22) ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் அந்தோணி தவிர மற்ற 3 பேரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் அய்யப்பனின் அண்ணன் முருகன் (27) அவரது வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.

    ஒரே நேரத்தில் 4 பேர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மது குடித்ததால் அவர்கள் இறந்ததாக தகவல் வெளியான நிலையில் சிவகாசி லிங்காபுரம் காலனியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை (எண்.11851) பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    காலாவதியான மது விற்கப்பட்டதா? அல்லது மதுவில் வி‌ஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் சம்பவ இடம் விரைந்து விசாரணை நடத்தினர்.

    முதலில் இறந்த கணேசன் எடுத்த வாந்தியை பரிசோதனை செய்தபோது அதில் குருணை மருந்து கலந்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மது அருந்திய 3 பேர் இறந்த நிலையில் வீட்டில் இருந்த முருகன் இறந்தது எப்படி? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் முருகனின் சகோதரி வள்ளி (33) சமைத்த கோழிக்கறியில் (சிக்கன் 65) குருணை மருந்து கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதை சாப்பிட்டதுதான் 4 பேரின் சாவுக்கு காரணம் என தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் வள்ளியை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சகோதரர்களை கொலை செய்ய திட்டமிட்டு கோழிக்கறியில் வி‌ஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வள்ளியை கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    சிவகாசியில் செல்வம் (44) என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் பணியாற்றி வந்தேன். கணவரை பிரிந்து வாழ்ந்த எனக்கும், செல்வத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.

    இதுகுறித்து தெரிய வந்ததும் எனது தம்பிகள் முருகன், அய்யப்பன் கண்டித்தனர். இதுபற்றி செல்வத்திடம் தெரிவித்தேன். அவர் கூறியபடி முருகனுக்கு பிடித்த கோழிக்கறியில் குருணை மருந்தை கலந்தேன். பின்னர் நான் இருக்கன்குடி கோவிலுக்கு செல்வதாக முருகனிடம் கூறி விட்டு வெளியில் சென்று விட்டேன்.

    முருகன் தான் சாப்பிட்டதுபோக மீதமுள்ள கோழிக்கறியை நண்பர்களுக்கு கொடுத்துள்ளான். இதனை சாப்பிட்டதால்தான் மருந்து அருந்தியவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதில் கணேசன், செய்யது இப்ராகிம் ஷா என்ற ஜம்பு, கவுதம் இறந்துள்ளனர். முருகன் வீட்டிலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளான்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வள்ளி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவகாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து அச்சக அதிபர் செல்வத்தையும் கைது செய்தார்.

    இதற்கிடையில் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த ராஜாமுகமது (60), கருப்பையா (62), ரிசர்வ் லைன் சிவக்குமார் (28), விசுவநத்தம் கருப்பசாமி (33) ஆகியோர் மது குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இவர்களில் கருப்பசாமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    பராசக்தி கலனியில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்.11848) மது வாங்கி அருந்திய இவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×