search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்கத்து வீட்டுக்காரர்"

    • வீட்டுக்குள் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதை அம்ஷத் கண்டு பிடித்தார்.
    • பொருட்களுடன் கொள்ளையன் தப்பிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றான்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

    வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர், முன்பக்க கதவில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தான். பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பிக்க தயாரானான்.

    அந்த சமயம் பக்கத்து வீட்டில் வசிக்கும் அம்ஷத் என்பவர் எதேச்சையாக அருண்குமார் வீட்டை பார்த்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், வீட்டுக்குள் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதையும் கண்டு பிடித்தார். கொள்ளையனை பொறி வைத்து பிடிக்க அவர் முடிவு செய்தார். துரித நடவடிக்கையாக தனது வீட்டில் இருந்து பூட்டை எடுத்துச் சென்று அருண்குமார் வீட்டுக்கதவில் போட்டு பூட்டினார். இதனால் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையனால் தப்பிக்க முடியவில்லை. வசமாக சிக்கிக் கொண்டான்.

    இதுபற்றி அம்ஷத், ஆட்டோ டிரைவர் அருண்குமாருக்கும், பேரூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு திருடிய பொருட்களுடன் கொள்ளையன் தப்பிக்க முடியாமல் விழிபிதுங்கி நின்றான்.

    விசாரணையில் அவனது பெயர் விவேக் (வயது 23), திருப்பூர் அனுப்பர்பாளை யத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. விவேக்கை பேரூர் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார்கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ×