search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக மாதிரி சட்டசபை கூட்டம்"

    அதிமுக ஆட்சி தொடர என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும், தேவைப்பட்டால் கூவத்தூர் ரகசியத்தை வெளியிட தயாராக இருப்பதாகவும் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார். #Karunas #Koovathur
    சென்னை:

    தி.மு.க. சார்பில் அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இப்போதைய அரசு ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது. மக்கள் மீது அக்கறை கொள்ளாமல் தங்கள் மீது மட்டும் அக்கறையுடன் செயல்படுகிறார்கள். நான் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டேன். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டு ஜெயித்தேன்.

    என்றாலும், இன்று வரை நடுநிலையுடன்தான் செயல்படுகிறேன். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். தூத்துக்குடியில் அரசு நடந்து கொண்ட விதம் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்து இருக்கிறது.

    தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் நடத்திய மக்கள் மீது குறிவைத்து சுட போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இது பற்றி சட்டசபையில் பேசுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. உதவி வட்டாட்சியர் உத்தரவுப்படி துப்பாக்கி சூடு நடந்தது என்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் இது பற்றி பேசும் போது துப்பாக்கி சூடு என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னுடைய பாதுகாப்புக்காக நியமித்த அதிகாரியை நீக்கி இருக்கிறார்கள். சட்டசபையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து நான் பேசியதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

    நான் எப்போதும் நியாயத்தின் பக்கம்தான் இருப்பேன். தி.மு.க. தற்போது மக்களுக்காக குரல் கொடுக்கிறது. நானும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த ஆட்சி நீக்கப்பட வேண்டும்.

    அடுத்து ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சி அமைய வேண்டும். இதில், மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆக வேண்டும். மக்கள் நலனை மட்டும் சிந்திக்கும் அரசாக அது இருக்க வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். சாதாரண சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு கூட பணம் கேட்கிறார்கள்.

    நான் எனது தொகுதி மக்களுக்காக 182 மனுக்களை அரசிடம் கொடுத்து இருக்கிறேன். அதில் 2 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. எனவே அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சி வரவேண்டும். எனக்கு சீட் வேண்டும் என்பதற்காக இப்படி பேசவில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டே இதை சொல்கிறேன்.


    மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் எம்.எல்.ஏ. ஆனேன். ஆனால் அவமானங்களை சந்தித்து விட்டேன். இந்த ஆட்சி தொடர என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். தேவைப்பட்டால் கூவத்தூர் சம்பவம் பற்றிய ரகசியத்தை வெளியிடவும் தயாராக இருக்கிறேன்.

    இன்றைய அரசு பணத்துக்காக நடைபெறும் அரசாக இருக்கிறது. வியாபாரம் போல நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மக்கள் இந்த அரசை விரும்பவில்லை. எனவே, மக்கள் விரும்பும் அரசு, ஜனநாயகத்தை மதிக்கும் அரசு வர வேண்டும். அதற்கு நானும் துணை நிற்கிறேன்.

    இவ்வாறு கருணாஸ் பேசினார். #Karunas #Koovathur
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று தி.மு.க. மாதிரி சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். #DMKSampleAssembly #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. சார்பில் மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்தப்பட்டது.

    இதற்கு தி.மு.க. சட்ட மன்ற கொறடா சக்கரபாணி தலைமை தாங்கினார். அவருக்கு சட்டமன்ற சபாநாயகர் இருக்கை போன்று மேடையில் தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

    கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக், முக்குலத்தோர் புலிப்படை கட்சியைச்சேர்ந்த எம்.எல். ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் சட்டசபையில் வாசிப்பது போல் சக்கரபாணி திருக்குறள் வாசித்தார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் ஒரு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், மக்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்யாமல் அலட்சியப்படுத்தியதால்தான் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. நேற்று சட்டமன்றத்தில் இதுபற்றி முறையாக பேச அனுமதிக்கவில்லை.

    எனவே இன்று மாதிரி சட்டமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது என்றார். இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பிறகு மு.க.ஸ்டாலின் மாதிரி சட்டமன்றம் சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சார்பில் பல்வேறு விதத்தில் ரூ.100 கோடி வைப்பு தொகை உள்ளது. அதில் இருந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அனைவரது குடும்பத்துக்கும் தலா ரூ.1 கோடி நிதி வழங்க வேண்டும் என்றார்.

    இந்த தீர்மானத்தை ராமசாமி (காங்கிரஸ்), அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோர் வழிமொழிந்தனர். தீர்மானத்துக்கு ஆதரவாக உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கீதாஜீவன்:- 1993-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1995-ல் உற்பத்தி தொடங்கியது.



    நச்சுக்காற்று, சுகாதாரக் கேடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கடந்த 22-ந்தேதி சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே இப்போராட்டம் குறித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்களிடம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.

    ஆனால் திடீரென்று அந்த மக்கள் மீது தேவையின்றி துப்பாக்கி சூடு நடத்தி 13 உயிரை பறித்து இருக்கிறார்கள். இதற்கு முறையான விசாரணை நடத்த வேண்டும்.

    அனிதா ராதாகிருஷ்ணன்:- ஊர்வலம் அமைதியாக நடந்தது. யாரிடமும் ஆயுதம் இல்லை. வன்முறையும் நடைபெறவில்லை. ஆனால் திட்டமிட்டு அந்த படுகொலையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டிய முதல்-அமைச்சர் டி.வி.யில்தான் இதை பார்த்தேன் என்கிறார். சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

    துரைமுருகன், தங்கம் தென்னரசு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்பட பல்வேறு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.

    வசந்தகுமார் (காங்):- ஸ்டெர்லைட் ஆலை எங்கள் மாநிலத்துக்கு தேவையில்லை என்று மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்கள் புறக்கணித்தன. ஆனால் இதற்கு அனுமதி வழங்கியது இன்றைய அ.தி.மு.க. அரசு. இவ்வளவு பெரிய போராட்டத்தில் பலர் உயிரிழந்த பிறகும் அதுபற்றி தனக்கு தெரியாது என முதல்-அமைச்சர் சொன்னது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு.

    கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் மற்றொரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடந்தது. #DMKSampleAssembly #MKStalin
    ×