search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்காழி தற்கொலை"

    சீர்காழி அருகே கர்ப்பிணி மனைவியை தாக்கிய வேதனையில் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார்.
    சீர்காழி:

    திருவாரூர் மாவட்டம் குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 30). தனியார் வங்கி ஊழியர். இவருடைய மனைவி சூர்யா (29).

    இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாக உள்ள சூர்யா, சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார்.

    அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் சென்றார். குடிபோதையில் சென்ற ஜெயக்குமார், தனது மனைவி சூர்யாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த சூர்யா, சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடிபோதையில் மனைவியை தாக்கி விட்டோமே என்று மனம் உடைந்த வங்கி ஊழியர் ஜெயக்குமார், வைத்தீஸ்வரன்கோவிலில் ஒரு ஓட்டலின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நவநீதன் கொடுத்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை மாவட்டம் சீர்காழி அருகே குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் உதயகுமார். மீனவர். இவரது மனைவி சகுந்தலா வள்ளி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ரோகித் (6) மற்றும் ரசித் (2) என்ற 2 ஆண் மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சகுந்தலாவள்ளி 3-வது முறையாக கர்ப்பம் ஆனார். 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    நேற்று மாலை சகுந்தலா வள்ளியின் மாமியார் ராஜவள்ளி அங்கு வந்தார். அவர் மருமகள் சகுந்தலா வள்ளியிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சகுந்தலாவள்ளி மனம் உடைந்தார். கர்ப்பிணி என்று பாராமல் தன்னுடன் மாமியார் தகராறு செய்கிறாரே என்று விரக்தி அடைந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடல்கருகிய நிலையில் இருந்த சகுந்தலா வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சகுந்தலாவள்ளியின் உறவினர்கள் அங்கு திரண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை சகுந்தலாவள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தை இறந்து பிறந்தது. இதை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து சகுந்தலாவள்ளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.
    ×