search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவா எம்எல்ஏ"

    புதுவை அரசு பொது மருத்துவமனை தன் தகுதிகளையும், பெருமைகளையும் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது என்று சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் சிவா வேதனையாக கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் சிவா பேசியதாவது:-

    புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு மிகப் பெரிய வரவேற்பும், புண்ணியமும் கடந்த காலங்களில் இருந்தது. இன்று கொஞ்சம், கொஞ்சமாக பொது மருத்துவமனை தன் தகுதிகளையும், பெருமைகளையும் ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. அங்கிருந்த பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை பிரிவை கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்தவர்களில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும்.

    சுகாதாரத்துறை அமைச்சர் வாரம் ஒருமுறை மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிய வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகள் கூட கையிருப்பு இல்லை. அந்த அளவிற்கு புதுவை மருத்துவமனை உள்ளது.

    இதே நிலைதான் மற்ற மருத்துவமனைகளிலும் நிலவுகிறது. 2001-ல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வாங்கப்பட்டது. அது, 16 ஆண்டுகள் இயங்கியது. பிறகு அக்கருவி பழுதானதும் தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டு நோயாளிகள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து வருகின்றனர். இதற்காக அரசு இதுவரை எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கவர்னரின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக சட்டசபையில் திமுக உறுப்பின் சிவா கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க. உறுப்பினர் சிவா பேசியதாவது:-

    சூறாவளி காற்றில் முதல்-அமைச்சர் ஆட்சி என்ற கப்பலை செலுத்தி வருகிறார். கவர்னர் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்றுத்தராமல் அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.

    ஏற்கனவே 12 ஆண்டு முதல்-அமைச்சராகவும், 24 ஆண்டுகள் அதிகார பதவியிலும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் நல்ல நிர்வாகத்தை விட்டுச் செல்லவில்லை. அவர் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அரசுக்கு இத்தகைய கடன்சுமை இருந்திருக்காது.

    ஆனால் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றபோது பெரும் கடன் சுமை இருந்தது. நிதிநிலை தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் பழி அரசு மீது விழுந்திருக்காது. அரசு நிறுவனங்களில் கடந்த காலத்தில் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை. இதனால் மூடுவிழா நடத்தப்பட்டு வந்தது. இந்த பழி தற்போதைய அரசு மீது விழுந்துவிட்டது.

    அரசு அதிகாரிகள் இரட்டை ஆட்சிக்கு வழி செய்வது போல செயல்படுகின்றனர். கவர்னரின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். வாரந்தோறும் கவர்னர் ஆய்வு செய்வதால் என்ன பலன் கிடைத்துள்ளது? 2 ஆண்டுகளாக கவர்னர் தொடர்ந்து குப்பைவாரும் பணியைத்தான் செய்கிறார். ஆனாலும் இன்று வரை நிலைமை சீராகவில்லை. புதுவையில் மட்டும் ஏற்கனவே இயங்கி வந்த 15 பொது கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளது.

    கவர்னர் எந்த வேலையை செய்தாலும் அதில் தோல்விதான். சட்டசபையில் ரோடியர் மில், சாலை போக்குவரத்து கழகம், பாப்ஸ்கோ தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமி‌ஷன் முடிவு என்ன ஆச்சு? உள்ளாட்சித்துறையில் யாருக்கும் தெரிவிக்கப்படாமலேயே வரிவிதிப்பு செய்யப்படுகிறது. புதிதாக எதையும் செய்யாமல் வரி விதிக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டத்திற்கு எங்கும் இல்லாத அளவுக்கு வரி வசூலிக்கப்படுகிறது.

    சட்டசபை குழு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்த பின்னர் ஆலையை அரசு மூடியுள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டே அரவை பணிகளை தொடங்க வேண்டும். குடிசை மாற்று வாரியம், ரோடியர் மில், பாப்ஸ்கோ ஆகியவற்றை கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும். அரசு நிறுவனங்களில் ரூ.50 கோடி கடன் பெற பிசிஎஸ் அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அரசு நிறுவனம் வழங்கும் காசோலை பணமின்றி திரும்புகிறது. இது அசிங்கமில்லையா?

    ஏனாம் பகுதிக்கு மட்டும் சுகாதார காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுவை, காரைக்கால், மாகி பகுதி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? காப்பீட்டு திட்டத்தில் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய மருத்துவமனைக்கு பணம் செல்ல வேண்டும் என நினைத்து செயல்படுகின்றனர்.

    கவர்னர் தான் சார்ந்த கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர நினைப்பதால் தான் பிரச்சினைகள் உருவாகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×