search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ப்ப தோஷம்"

    • சர்ப்ப தோஷம் முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை.
    • வான்வெளியில் 180 டிகிரி ஒன்றை ஒன்று எதிர் நோக்கி இருக்கும்.

    ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு தீய கிரகங்கள், வான்வெளியில் 180 டிகிரியில் ஒன்றை ஒன்று எதிர் நோக்கியவாறு இருக்கும். சுழற்சியில் இரண்டின் வேகமும் ஒரே அளவு என்பதால். அந்த 180 டிகிரில் ஒரு இம்மி கூட மாற்றம் இருக்காது.

    அவை இரண்டை தவிர மற்றும் உள்ள ஏழு கிரகங்கள், அடுத்தடுத்தோ அல்லது கூட்டாகவோ அந்த இரண்டு கிரகங்களுக்கு நடுவே வான்வெளியில் இருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில், ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அந்த கிரகங்கள் மாட்டிக்கொண்டுவிடும்.

    அதன் கால அளவு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. சிலர் அதை 33 வருட காலம் என்று சொல்வார்கள். வேறு சிலர் அதை லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ, அத்தனை வருடம் அது உண்டென்பார்கள். அந்த கருத்து பிரச்சினைகள் எல்லாம் இடையில் பல ஜோதிட வல்லுனர்களால் ஏற்பட்டவை.பொதுவாக முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை.

    • இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.
    • மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை.

    நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ராகு-கேது நிவர்த்தி தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் நாகூர் நாகநாத சாமி கோவில் காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.

    ராகு கால நேரத்தில் இத்தலத்து மூலவர் பெருமான் நாகநாத சாமியையும், நாகவல்லி தாயாரையும் வணங்கி, ராகு பகவானுக்கும் அவரது தேவியருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ராகுபகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்புக்குரியதாக கூறப்படுகிறது.

    காசிக்கு இணையானதாக குறிப்பிடப்படும் இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, தர்ப்பணம் அளித்து, தானம் செய்தால் கயாவில் வழிபாடு செய்த பலனும், பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் என கூறப்படுகிறது. இங்கு கிருத்திகை நட்சத்திர தினத்தில் சாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    நாகூர் நாகநாத சாமி கோவில் இறைவன் நாகநாதர், நாகராஜனால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இத்தலம் ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள புன்னாகவனத்தின் கீழே நாகலோகம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு நாகர் லிங்கமும் அதைச்சுற்றி இரு நாகங்கள் இணைந்து சிவலிங்க பூஜை செய்வதைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட நாகர்கள் சிலைகளும் உள்ளன.

    நாகர் லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் சாற்றி வழிபட்டால் மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை. இக்கோவிலின் கன்னி பகுதியில் நாககன்னி, நாகவல்லி சமேதராக ராகு பகவான் காட்சியளிக்கிறார். கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என்ற ஜோதிட சாஸ்திரப்படி இத்தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தனது தேவியருடன் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புக்குரியது ஆகும்.

    நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூரில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள நாகூர் நாகநாதர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • மாரியம்மன் கோவிலில் காணப்படும் புற்றுகளுக்கு புற்று மாரியம்மன் என்று பெயர்.
    • ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி புற்று வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும்.

    மாரியம்மன் வழிபாட்டுடன் நாக வழிபாடு தொடர்பு உடையதாக திகழ்கிறது. பொதுவாக மாரியம்மன் கோவில்களில் புற்று காணப்படும். மாரியம்மனே பாம்பாக வந்து அருள் புரிவதாக மக்கள் நம்புகின்றனர். மாரியம்மன் புற்றில் உறைவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

    மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்குக் குடையாக இருப்பது பாம்பு தான். மாரியம்மன் கோவிலில் காணப்படும் புற்றுகளுக்கு புற்று மாரியம்மன் என்று பெயர். இக்கோவில்களில் புற்றுகளுக்கு தனியாக பூஜைகள் செய்யப்பட்டு நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன.

    மாரியம்மன் கோவில் மூலஸ்தானத்தையும், புற்றையும் இணைக்கும் ரகசிய வழி ஒன்று இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். சென்னை அடுத்த பெரியபாளையம் கோவிலில் கருவறைக்கும் புற்றுக்கும் இடையே அடிக்கடி நாகம் சென்று வருவதை இன்றும் பக்தர்கள் பார்க்கிறார்கள்.

    புற்றின் துவாரத்தின் வழியாகப் படமெடுத்து ஆடும் பாம்பை தரிசிப்பது நல்ல சகுனமாக கருதுகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி புற்று வழிபாட்டிற்கு உரிய நாட்களாகும். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியாக நாகபஞ்சமி என்றும், ஐப்பசி மாதம் வளர்பிறை சதுர்த்தியான நாக சதுர்த்தி அன்றும், பெண்கள் புற்று வழிபாடு செய்கின்றனர்.

    புற்றுக்கு பால் விடுதல், பொங்கல் வைத்தல், மூட்டை முதலியவற்றை புற்றுக்குள் இடுதல் ஆகியவை புற்று வழிபாட்டில் முக்கிய நிகழ்ச்சிகளாக உள்ளன.

    மாரியம்மன் வழிபாடு, சக்தி வழிபாட்டின் ஒரு அம்சமாக உள்ளது. நாக வழிபாடும் சக்தி வழிபாட்டின் ஒரு அம்சமாக உள்ளது. சக்தியின் ஒரு வடிவமாகப் பாம்பு கருதப்படுகிறது. மேலும் பெண் தெய்வங்கள் பலவற்றிற்கும் குடையாக வீற்றிருப்பது பாம்பு தான்.

    • ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து, தூய ஆடைகளை அணிந்து நாக பூஜை செய்தால் துன்பங்கள் அகலும்.
    • சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வரவேண்டும்.

    ஆடி வெள்ளிக்கிழமை பெண்களுக்கு முக்கிய தினமாகக் கருதப்படுகிறது. பெண்கள் இக்காலங்களில் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து, கற்பூரதீபம் காட்டி பூஜித்து வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    நாகசதுர்த்தி, நாக பஞ்சமி நாட்களில் நாகபூஜை செய்வதால் நாகதோஷம், நாகபயம் முதலியவை ஏற்படாது.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து, தூய ஆடைகளை அணிந்து நாக பூஜை செய்தால் துன்பங்கள் அகலும்.

    சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வரவேண்டும். அதேபோல் ராகு, கேது கிரகங்கள் அமைந்துள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படும் நாகதோஷம் நீங்கும்.

    ஒருவரது ஜாதகத்தில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கு இடையில் உள்ள வீடுகளில் மற்ற கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷம் உள்ளது என்று பொருள். இவர் வாழும் பாம்பை முற்பிறவியில் அடித்திருப்பவர் எனச் ஜோதிடம் கூறுகிறது.

    அதேபோல் ஜாதகத்தில் 1,5,7,9 ஆகிய வீடுகளில் ராகு இருந்தாலும் நாகதோஷம் உள்ளது எனக்கருதலாம்.

    • வீட்டில் பூஜை செய்த பிறகுதான், அருகில் உள்ள பாம்புப்புற்றுக்குச் சென்று பால் ஊற்றுவர்.
    • வீட்டுக்குள் சென்றதும், புற்றிலிருந்து கொண்டு வந்த புற்று மண்ணுடன் சிறிதளவு அட்சதையைச் சேர்ப்பர்.

    பொதுவாக நாக சதுர்த்தியைக் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராட்டிய போன்ற மொழி வழி மாநிலப் பெண்கள் பலரும் கொண்டாடுகின்றனர். இவ்விழாவைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்று வழங்கப்படுகிறது.

    ஒரு பெண்ணிற்கு ஐந்து சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் வயலில் உழவு செய்து கொண்டிருந்த போது, நல்ல பாம்பு கடித்து இறந்து விட்டனர்.

    அவர்களை உயிர்ப்பித்துத் தரும் படி, அந்தப் பெண், நாகராஜனாகிய ஆதிசேஷனை வேண்டிப் பூஜை செய்தாள். அதன் நினைவாகக் கொண்டாடப்படுவதுதான் நாக சதுர்த்திப் பண்டிகையாகும்.

    பெண்கள் தங்களுடன் பிறந்த சகோதரர்களின் நலனைக் கோரி இந்தப் பண்டிகைக் கொண்டாடுகின்றனர். நாக சதுர்த்தி தினத்தன்று, நாகப் பிரதிஷ்டை செய்வர். நாகப்புற்றுக்குப் பால் வார்த்து, முட்டை உடைத்து வைத்து நாகபூஜை செய்வது வழக்கம்.

    நாக சதுர்த்தியன்று வீட்டிலுள்ள சகோதரிகள், ஏதேனும் ஓர் உலோகத்தால் செய்த பாம்புச் சிலையை வைத்துப் பூஜை செய்வர். நோன்புக் கயிற்றை வலக்கையில் கட்டிக் கொள்வர். ஒரு மஞ்சள் நூல் கயிற்றின் நடுவில் மலர் ஒன்றைத் தொடுத்துக் கட்டி, பூஜையில் வைத்து பிறகு கையில் கட்டிக் கொள்வர். இது நோன்பு கயிறு ஆகும்.

    பாம்பு புற்று இருக்கும் இடத்திற்குச் சென்று பால் வார்க்க வசதியற்றவர், வீட்டில் பூஜை செய்த நாகத்திற்கே அதை அபிஷேகம் செய்து விடுவர்.

    வீட்டில் பூஜை செய்த பிறகுதான், அருகில் உள்ள பாம்புப்புற்றுக்குச் சென்று பால் ஊற்றுவர். பின்பு தாம்பூல நிவேதனம் செய்து, கற்பூரம் ஏற்றிப் பூசிப்பர்.

    அடுத்து நாகப்புற்றை வலம் வந்து வணங்கி விட்டு வீட்டுக்குப் புறப்படும் போது, பாம்பு புற்றின் அருகிலிருந்து சிறிதளவு புற்று மண்ணைத் தம் கையில் எடுத்துச் கொண்டு செல்வர். வீட்டிற்குச் சென்றதும் நிலை வாயிற்படியின் இரு பக்கத்திலும் மஞ்சளைப் பூசுவர்.

    அதன் மீது குங்குமத்தால், மேலே தலையும் கீழே வாலும் கொண்ட பாம்பின் படத்தை இரு பக்கமும் வரைவர். இறுதியாக, நிலைவாயில் படிக்குக் கற்பூர தீபம் காட்டி, வணங்கி விட்டுத்தான் வீட்டின் உள்ளே செல்வர்.

    வீட்டுக்குள் சென்றதும், புற்றிலிருந்து கொண்டு வந்த புற்று மண்ணுடன் சிறிதளவு அட்சதையைச் சேர்ப்பர்.

    தம்முடன் பிறந்த சகோதரர்கள் அருகிலிருந்தால், அந்தப் புற்றுமண் அட்சதையை அவர்கள் தலையில் இட்டு, ஆசிர்வதிப்பர். பெரியவர்களாக இருந்தால் அவர்களை வாழ்த்தி ஆசி கூறுவர்.

    சகோதரர்கள் வெளியூர்களில் இருந்தால், புற்று மண் அட்சதையை அஞ்சல் உறையில் வைத்து அஞ்சலில் அனுப்பி வைப்பர். இவ்வாறு ஆசீர்வாதம் செய்த சகோதரிகளுக்கு உடன் பிறந்த சகோதரர்கள், தங்கள் சக்திக்குத்தக்க தட்சணையைக் தாம்பூலத்துடன் கொடுப்பது வழக்கம்.

    • பாம்புக்கல்லில் இரண்டு பாம்புகள் பின்னி இணைந்திருப்பதையும் நடுவில் சிறிய சிவலிங்கம் இருப்பதையும் காணலாம்.
    • அரசமரம், விநாயகர், பாம்புக்கல் இந்த மூன்றையும் ஒருங்கே வலம் வந்து வழிபடவேண்டும்.

    சிவாலயங்களில் வழிபாடு செய்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது ஒரு புறம் அரச மரத்தடியை காணலாம். அரச மரத்தடியில் விநாயகர் சிலையும், பாம்பு கல்லும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை பல கோவில்களில் காணலாம். பாம்புக்கல்லில் இரண்டு பாம்புகள் பின்னி இணைந்திருப்பதையும் நடுவில் சிறிய சிவலிங்கம் இருப்பதையும் காணலாம்.

    பாம்புக்கல்லில் உள்ள பாம்பு போல தம்பதியர் இணைந்து, விநாயகரின் அருளாலும், வேப்பமரங்களின் மருத்துவ சக்தியாலும் மகப்பேறு பெறலாம் என்பது தத்துவம். அரசமரம், விநாயகர், பாம்புக்கல் இந்த மூன்றையும் ஒருங்கே வலம் வந்து வழிபடவேண்டும். திங்கட்கிழமை அமாவாசை வந்தால் அன்று வழிபாடு செய்வது சிறப்பு உடையது.

    வழிபாடு செய்யும் பொழுது ஏழுமுறை வலம் வரவேண்டும். ஒரு சிலர் கடும் விரதம் இருந்து 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். பாம்புக் கல்லைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினால் முதல்நாள் அதை தண்ணீரில் மூழ்கி இருக்கச் செய்ய வேண்டும். மகப்பேறு வேண்டி பிராத்தனை செய்து கொண்ட தம்பதிகள் அந்த குறிப்பிட்ட முதல் நாள் இரவு உணவு உட்கொள்ளக்கூடாது. மறுநாள் அரசமரத்தடியில் மேடை அமைத்து அதன்மேல் பாம்புக்கல்லைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.

    ராமேஸ்வரத்தில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை, செய்வது விசேஷம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் ஆலயத்தில் எண்ணற்ற பாம்புக்கற்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

    • வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.
    • கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும்.

    ராகுவின் உடற்பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது. கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும். கேது ஞானம், மோட்சம் தருபவர். ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு, வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.

    கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு (கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி, பல வர்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும். வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.

    • ராகு கால ஏகாதசி பூஜை-பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
    • சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    1. ராகு கால பவுர்ணமி பூஜை-பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.

    2. ராகு கால கிருத்திகை பூஜை-புகழ் தரும்.

    3. ராகு கால சஷ்டி பூஜை-புத்திரப்பேறு கிடைக்கும்.

    4. ராகு கால ஏகாதசி பூஜை-பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.

    5. ராகு கால சதுர்த்தி பூஜை-துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.

    எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    • லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும்.
    • லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம்.

    ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.

    லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன்,மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.

    லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.

    லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.

    லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம். ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்,

    லக்னம், அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால், விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.

    லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம்.

    இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும். 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.

    அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்மாந்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ, அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.

    அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்சத்திரமாக வரும் ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

    • சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
    • காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.

    ராகு காலமே பல பரிகாரங்கள் செய்ய உகந்த காலமாகும். ராகுகாலம் 1மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 - 9.00, செவ்வாய் 3.00 - 4.30, புதன் 12.00 - 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12.00, சனி 9.00 - 10.30 ஆகும்.

    ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேட காலமாகும்.

    இந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோஷங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.

    சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை

    15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)

    மங்களவார (செவ்வாய்க்கிழமை) பூஜை

    ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.௦௦ - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.

    துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.

    செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.

    • நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும்.
    • கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும்.

    கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும்.

    கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.

    சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.

    • கால-சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாகசர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
    • ஸ்ரீஆதிசேஷனே, ஸ்ரீராமனுஜராக அவதரித்தது உலகறிந்த உண்மையாகும்.

    கால-சர்ப்ப தோஷத்தை மற்ற தோஷங்களைப் போலவே ஜாதகத்தின் லக்கினம், பூர்வ புண்ணியம் ஜெனன காலத்தின் மற்றய கிரக நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, தீய பலன்களை விளைவிக்கும்.

    ஆதலால், கால-சர்ப்ப தோஷம் உள்பட அனைத்து தோஷங்களையும், அவற்றின் தன்மை, அளவு, ஏற்படும் காலம் இவற்றைத் தக்க ஜோதிடரைக் கொண்டு ஆராய்ந்து, அறிந்து கொள்ளாமல் கலங்க வேண்டிய அவசியமில்லை.

    பாதிப்பின் கடுமையைத் தக்க பரிகாரத்தினால் குறைக்க முடியும். ஆயினும் அந்தப் பரிகாரத்தை - சாந்தியை - அதிகப்பொருட்செலவில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.

    சாதாரணமாக, சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும். ஆனால் கால-சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.

    இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில், சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் பரிகார ஸ்சேத்திரங்களில் ஒன்றாகும்.

    சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால் பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும் கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.

    "ஆனந்த ப்ரதம்ம ரூபம் - திரேதாயோம் பலபத்ரச்ச கலியுகே கசதி பவிஷ்யதி" -ஸ்ரீவிஷ்ணுபுராண ஸ்லோகம்.

    ஸ்ரீஆதிசேஷனே, ஸ்ரீராமனுஜராக அவதரித்தது உலகறிந்த உண்மையாகும்.

    ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் கால-சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாகசர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால் அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும். (ஆதிசேஷனுக்கு அனந்த சர்ப்ப என்ற பெயர் உண்டு).

    இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, கால-சர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    ×