search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை குற்றாலம்"

    • தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தையொட்டி கோவை குற்றாலம் உள்ளது.

    இங்கு கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவர்கள் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனத்தை சுற்றி பார்ப்பது வழக்கம். குறிப்பாக கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும்.

    தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதிகளான சாடிவயல், நரசீபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதியில் அவ்வப்போது மிதமானது முதல் கனமழையும் பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை முதல் கோவை குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து போளுவாம்பட்டி வனசரக வனத்துறையினர் கூறும், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் கோவை குற்றால அருவி தற்காலிகமாக மூடப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது.
    • சிறுவாணி பகுதியில் பெய்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கோவை:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இங்குள்ள அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். இதனால் கோவை மட்டு மின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள். அவர்கள் அங்குள்ள அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

    கேரளாவில் பெய்து வரும் மழையால் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் கடந்த 5-ந் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பொது மக்கள் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர்.

    கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக நேற்று முதல் கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் சிறுவாணி பகுதியில் பெய்த கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இதனால் கோவை குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். அவர்கள் அங்குள்ள சாடிவயல் ஒடையில் குளித்து விட்டு திரும்பி வந்தனர்.

    • வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான 2 நாளில் மட்டும் 10 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர்.
    • கோவை குற்றாலத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது கோவை குற்றாலம். அடர்ந்த வனத்திற்கு நடுவே இந்த அருவி இருப்பதால் இந்த சுற்றுலா தலத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவர்கள் அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து, வனத்தில் உள்ள இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

    பல்வேறு பகுதிகளில் இருந்தும், கார், மோட்டார் சைக்கிள், வேன் போன்ற வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான 2 நாளில் மட்டும் 10 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர். கடந்த திங்கள் முதல் தற்போது வரை 2,500 பேர் வந்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே சென்றாலும், கோவை குற்றாலத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்காக கோவை குற்றாலத்திற்கு வந்துள்ளோம். இங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, இயற்கை காட்சியை கண்டு ரசித்து வருகிறோம்.

    கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு என நுழைவு வாயில் 2 கழிப்பறைகள் மற்றும் நீர்வீழ்ச்சியின் அருகே சில கழிப்பறைகள் உள்ளன.

    ஆனால் தற்போது கோடை விடுமுறையையொட்டி இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. கழிப்பறை செல்வதற்கு வெகுநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் டிக்கெட் கவுண்டரிலும் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கூடுதல் பணியாளர்களை நியமித்து, விரைவில் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் தங்கி கொள்வதற்காக மர வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து வருகிறது. மேலும் மின்தடையும் ஏற்படுகிறது. எனவே கோவை குற்றாலத்தில் முக்கிய அடிப்படை வசதிகளை வனத்துறையினர் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக கழிப்பறைகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பெருகி வரும் தேவைக்கு ஏற்ப மேலும் சில நடமாடும் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ரூ.30 லட்சம் செலவில் தொங்குபாலம் புதுப்பிக்கும் பணி நடக்க உள்ளது என்றார்.

    • பொங்கல் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • வனத்துறையினர் ராஜேஷ்குமாரிடம் இருந்து, ரூ.35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக கோவை குற்றாலம் உள்ளது.

    இங்கு வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்து செல்வர்.

    பொங்கல் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கோவை குற்றாலத்திற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20, காருக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டு வனத்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் டிக்கெட் வழங்கும் இடத்தில், பல்வேறு மோசடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கோவை குற்றாலத்திற்கு அதிகமாக பயணிகள் கூட்டம் வருகிறது. ஆனால் அரசுக்கு வரும் எண்ணிக்கை கணக்கானது மிக குறைவாக இருக்கிறது.

    இதனால் வனச்சரகர் சுசீந்திரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். அப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

    நுழைவு சீட்டு வழங்குமிடத்தில் 2 மிஷின்கள் உள்ளன. இதில் 2 மிஷின்களிலும் டிக்கெட்டை அச்சிட்டு பணத்தை பெற்று வருகின்றனர். ஆனால் இதில் ஒரு மிஷினில் மட்டுமே முறையாக அரசாங்கத்திற்கு செல்லும் வகையில் பதிவு செய்யப்படுகிறது.

    மற்றொரு மிஷின் மூலம் அச்சடிக்கப்படுவது போலி டிக்கெட் என்றும், மேலும் அந்த பணம் அரசாங்கத்திற்கு செல்லாமல் சீட்டு கொடுப்பவர்களே வைத்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபடுவர்கள் யார்? என்பதை கண்டறிய வனசரகர் சுசீந்திரன் அங்குள்ள வன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில், நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் பணியாற்றி வரும் வனவரான ராஜேஷ்குமார்(36) தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, போளுவாம்பட்டி வனசரகராக முன்பு பணியாற்றி தற்போது ராமநாதபுரத்தில் பணியாற்றி வரும் ஒருவர் அறிவுறுத்தலின் பேரில் தான் இதனை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து வனத்துறையினர் ராஜேஷ்குமாரிடம் இருந்து, ரூ.35 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே வனவர் ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் பணியாற்றி வரும் நபரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்போது கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது.
    • கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகள் முழுவதும் மறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கோவை:

    கோவை மக்களின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்வது கோவை குற்றாலம்.

    அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த சுற்றுலா தலம் உள்ளதால் இங்குள்ள இயற்கை அழகினையும், வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருவார்கள்.

    அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம்.

    தற்போது கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக இன்று காலை கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகள் முழுவதும் மறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர். அறிவிப்பு பதாகையும் வைத்துள்ளனர்.

    அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட வன அதிகாரிகள் கூறியதாவது:-

    கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று (புதன்கிழமை) அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறையும் வரை இந்த தற்காலிக தடை தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோவை குற்றாலத்தில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்

    ×