search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குக செல்வம்"

    • அண்மையில் சிறிது காலம் தடம் மாறிச் சென்றாலும், உடனே மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதுதான் கு.க.செல்வம்.
    • கு.க. செல்வத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான கு.க.செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும் வாஞ்சையும் குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது என்று எண்ணும்போது நெஞ்சம் விம்முகிறது. அவரது பேச்சுதான் பலருக்கும் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்குமே தவிர, அவரது வெள்ளை உள்ளம் பழகும் எவர்க்கும் கற்கண்டாய் இனிக்கும். இனி அந்தக் கற்கண்டைக் கழகத் தோழர்கள் காண இயலாது எனும் எண்ணம் வருத்துகிறது.

    சென்னை மேற்குப் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரர், தென்சென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர் எனக் கழகத்துக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பிள்ளை மனம் கொண்ட கழக வீரர் அவர்!

    எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, தலைவர் கலைஞரின் அன்புத் தம்பிகளில் ஒருவராக விளங்கினார். அதுநாள் முதலே என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பைச் செலுத்தி வந்தவர் கு.க.செல்வம். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றினார். நான் வெளியூர் செல்லும்போது பலசமயம் என்னுடன் அவரும் வருவார்.


    அண்மையில் சிறிது காலம் தடம் மாறிச் சென்றாலும், உடனே மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதுதான் கு.க.செல்வம். அவர் சென்றபோதே திரும்ப வந்துவிடுவார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

    கு.க.செல்வம் மறைவு என்பது அவரது குடும்பத்துக்கும் கழகத்துக்கும் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். என்னை நானே தேற்றிக் கொண்டு, அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • 2016ல் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
    • கு.க. செல்வம் தி.மு.க. தலைமை நிலைய அலுவலக செயலாளராக இருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைமை நிலைய அலுவலக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கு.க. செல்வம் சென்னையில் இன்று காலமானார்.

    கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலையில் கு.க.செல்வம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.

    இவர் 1997-ல் அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்தார். அதன் பிறகு 2016-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். அப்போது முதல் தி.மு.க. தலைமையிடத்தில் அதிக நெருக்கம் வைத்திருந்தார்.

    முன்னாள் எம்.எல்.ஏ., தி.நகர் ஜெ.அன்பழகன் மறைந்தபோது தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பதவி கிடைக்காததால் 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

    அதன்பிறகு மீண்டும் 2022-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.வில் தலைமை நிலைய அலுவலக செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது முதல் அண்ணா அறிவாலயத்தில் பணியாற்றி வந்தார்.

    அவரது மறைவை கேள்விப்பட்டதும் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட அறிவாலய நிர்வாகிகள் அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    ×