search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளி போஸ்டர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லீனா மணிமேகலைக்கு எதிராக மத்திய பிரதேச காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
    • தனது காளி இந்துத்துவாவை சிதைப்பதாக லீனா மணிமேகலை கூறி உள்ளார்.

    ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட, காளி படத்தின் போஸ்டர் கடும் புயலை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில், காளி தேவி சிகரெட் புகைப்பதுடன், கையில் ஓரினச்சேர்கையாளர்களின் கொடியை பிடித்திருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

    தன்னை விமர்சிப்பவர்களுக்கு லீனா மணிமேகலை தொடர்ந்து பதில் அளித்து வருகிறார். அவ்வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "என் காளி வினோதமானவள். அவள் சுதந்திரமான ஆன்மா. அவள் ஆணாதிக்கத்தை கடுமையாக எதிர்க்கிறாள். அவள் இந்துத்துவாவை தகர்க்கிறாள். அவள் முதலாளித்துவத்தை அழிக்கிறாள். அனைவரையும் தன் ஆயிரம் கரங்களால் அரவணைக்கிறாள்" என கூறியிருக்கிறார்.

    • காளி ஆவணப்பட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
    • லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.

    போபால்:

    பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய, 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். லீனா மணிமேகலை மீதான புகாரின் அடிப்படையில் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக மத்தயி பிரதேச போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் போபால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .

    லுக்அவுட் நோட்டீஸ் என்பது, போலீசாரால் அல்லது புலனாய்வு நிறுவனத்தால் தேடப்படும் நபரை நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது நாட்டிற்குள் நுழைவதையோ தடுப்பதற்காக வெளியிடப்படும் சுற்றறிக்கை ஆகும். இந்த சுற்றறிக்கையானது அதிகபட்சமாக 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

    • காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது.
    • மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு அவரது சொந்த கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

    கொல்கத்தா:

    ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் இந்து கடவுளான காளி வேடமணிந்த பெண் ஒருவர் வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு, கையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியைப் பிடித்திருப்பதாக இருந்தது. இதற்கு, பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். லீனா மணிமேகலையைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து, பிரச்சனையை மேலும் தீவிரமாக்கி உள்ளது.

    கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மஹுவா மொய்த்ரா பேசியதாவது:

    காளி தேவியை இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த வழியில் கடவுளை வழிபட உரிமை உண்டு. உதாரணமாக, நீங்கள் சிக்கிம் சென்றால் அங்கே கடவுளுக்கு மதுவைப் பிரசாதமாக படைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று, அங்கு மதுவை படைத்தீர்கள் என்றால், அவர்கள் அதை தெய்வநிந்தனை என்று கூறுவார்கள.

    என்னைப் பொறுத்தவரை, காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். நீங்கள் தாராபித் (மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய சக்தி பீடம்) சென்றால், சாதுக்கள் புகைபிடிப்பதைக் காணலாம். அதுதான் அங்கு வழிபடும் முறை. நான் காளியை வழிபடும் இந்துவாக இருப்பதால், காளியை அப்படிக் கற்பனை செய்ய உரிமை உண்டு; அது என் சுதந்திரம்.

    உங்கள் கடவுளை சைவமாக வழிபட உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவுக்கு எனக்கும் சுதந்திரம் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    மஹுவா மொய்த்ராவின் இந்த கருத்து கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லீனா மணிமேகலையின் காளி போஸ்டருக்கு ஆதரிப்பதாக கூறி, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக் கடவுள்களை அவமதிப்பது மேற்கு வங்காள ஆளும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? என்றும் பாஜக கேள்வி எழுப்பியது.

    இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் உடனடியாக விளக்கம் அளித்ததுடன், மஹுவா மொய்த்ராவுக்கு கண்டனமும் தெரிவித்தது. "மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று திரிணாமுல் காங்கிரஸ் பதிவிட்டது.

    இதற்கிடையே தனது கருத்து குறித்து தெளிவுபடுத்திய மஹுவா மொய்த்ரா, தான் எந்தப் படத்திற்கோ அல்லது போஸ்டருக்கோ ஆதரவளிக்கவில்லை என்றும், புகைபிடிக்கும் வார்த்தையை குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

    மத உணர்வுகளை புண்படுத்தியதாக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிதேன் சாட்டர்ஜி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போபால் நகரில் உள்ள டீ விற்பனையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    • காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி டெல்லி போலீசில் புகார்.
    • இந்து கடவுளை அவமரியாதை செய்வதாக கனடா இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு.

    இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக 153A மற்றும் 295A ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை பி.ஆர்.ஓ. சுமன் நல்வா, தெரிவித்துள்ளார்.

    இதனிடையே டொராண்டோவில் உள்ள ஆகாகான் அருங்காட்சியகத்தில் காளி ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் போஸ்டர் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பொருட்களை திரும்பப் பெறுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து கடவுளை அவமரியாதையாக சித்தரிப்பது குறித்து கனடாவில் உள்ள இந்து சமூகத் தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காளி ஆவணப்பட போஸ்டர் குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை தமது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாலைப்பொழுதில் டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் இந்த ஆவணப்படம் என்று கூறியுள்ளார்.

    ×