search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி குற்றச்சாட்டு"

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறி பின்னர் திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்ட மாணவி, அங்கு செல்ல மறுத்து பழைய கல்லூரிக்கு சென்ற நிலையில் அவருக்கு எதிராக மாற்ற மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார்.

    மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பேராசிரியைகள் பேசியதாக மாணவி ஆடியோக்களையும் வெளியிட்டார். இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பாலியல் புகார் குறித்து ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் மற்றும் கோவை வேளாண் பல்கலைக் கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான குழு முதற்கட்ட விசாரணையோடு மாணவி புகாரை கிடப்பில் போட்டுவிட்டனர்.

    இதையடுத்து, சமீபத்தில் திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவி திடீரென மாற்றப்பட்டார். அதேபோல் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியைகள் மைதிலி திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கும், புனிதா கோவை வேளாண் கல்லூரிக்கும் மாற்றப்பட்டனர்.


    இந்த நிலையில், திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்ட ஆணையை மாணவி ஏற்க மறுத்துவிட்டார். நீதி கிடைக்கும் வரை கல்லூரியை விட்டு வெளியேற மாட்டேன் என திட்டவட்டமாக மாணவி கூறினார். கல்லூரிக்கு தினமும் சென்றார்.

    ஆனால், வகுப்பறைக்குள் மாணவி சென்ற உடன் மற்ற மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு பேராசிரியர், பேராசிரியைகள் வெளியில் சென்றுள்ளனர். இன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு எதிராக மாணவர்கள், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், தவறு இழைத்தவர்களை தண்டிக்காமல் என்னை வேறு கல்லூரிக்கு மாற்றுவது, எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்களை தப்பிக்க வைக்கும் முயற்சி.

    நான் திருவண்ணாமலை கல்லூரியில் தான் தொடர்ந்து படிப்பேன். எனக்கு எதிராக போராட்டம் தூண்டி விடப்படுகிறது. சில மாணவர்கள் என்னை கிண்டலடிக்கும் விதமாக ‘கேலடி கண்மணி.... வெல்லும் எங்கள் போராட்டம்’ என கோ‌ஷமிடுகின்றனர். இது கண்டிக்கத்தக்க செயல். எனக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். வேறு கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்றார்.  #ChennaiStudentharassment #AgriCollege

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவியை ராகிங் செய்து வீடியோ எடுத்த சக மாணவிகள் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருக்கும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இது தொடர்பாக, ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. பேராசிரியர்கள் பேசியதாக வெளியான ஆடியோக்கள் ‘குரல் மாதிரி’ சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    ‘குரல் மாதிரி’ சோதனை முடிவில் ஆடியோவில் பேசி இருப்பது பேராசிரியைகள் தான் என தெரியவந்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில், உதவி பேராசிரியர் சிக்காமல் இருக்க பேராசிரியைகளுக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் முதலில் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஏனெனில் மாணவிகள் விடுதிக்குள் பேராசிரியர்கள், ஆண்கள் செல்ல அனுமதி கிடையாது. வேளாண்மை பல்கலை கழக விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. பேராசிரியரின் ‘லீலைகள்’ குறித்து மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் தான் முதலில் புகார் கூறியுள்ளார்.

    அப்போது, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி முதல்வர் ஈடுபட்டார். கல்லூரி பெயர் கெட்டு போய்விடும் என்பதால், கல்லூரி நிர்வாகம் மாணவியின் புகாரை மூடிமறைக்க திட்டமிட்டுள்ளது.

    கல்லூரி நிர்வாகத்தின் சமரசத்தை ஏற்று கொள்ளாத மாணவி, வெளிப்படையாக பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவிக்க போவதாக கூறினார். இதையடுத்து தான் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் மாணவியை சமரசப்படுத்த அனுப்பப்பட்டனர்.

    மாணவி கட்டளைக்கு அடிப்பணியாததால், ஆத்திரமடைந்த பேராசிரியைகள் 2 பேரும், மிரட்டியுள்ளனர். மாணவிக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்துள்ளனர். இதற்காக, விடுதியில் உள்ள சக மாணவிகள் 2 பேர் மூலம் மாணவியிடம் ‘ராகிங்’ செய்து சின்னசின்ன இடையூறுகளை ஏற்படுத்தினர்.

    இப்படி செய்வதால், உதவி பேராசிரியர் மீது புகார் அளிக்கவிடாமல் மாணவியை தடுக்க முடியும் என பேராசிரியைகள் நினைத்தனர். ஆனால், மாணவி ‘ராகிங்’ கொடுமைக்கு அஞ்சவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

    அதன்பிறகு, மாணவியை அதிகமாக டார்ச்சர் செய்தனர். விடுதியில் மாணவி தங்கியிருந்த அறையின் உள் தாழ்ப்பாள், வெளித் தாழ்பாள் உடைக்கப்பட்டது. மாணவியுடன் தங்கியிருந்த மற்ற மாணவிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    தனிமைப்படுத்தப்பட்ட மாணவி இரவில் அறையை பூட்டிக்கொண்டு தூங்க முடியாமல் தவித்தார். நள்ளிரவில் மாணவி தூங்கி கொண்டிருக்கும் வேளையில் தங்களுக்கு ஆதரவாக இருந்த 2 மாணவிகள் மூலம் பேராசிரியைகள் மாணவியை பல்வேறு கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

    மாணவி வெளியிட்ட ஆடியோவில் பேராசிரியைகள் தங்களிடம் உன்னை பற்றிய ரகசியங்கள் உள்ளன. அதை வெளியிடுவோம் என்று மிரட்டியதும் இந்த போட்டோ, வீடியோக்களை வைத்து தான் என்று தெரிய வந்துள்ளது.

    வாணாபுரம் போலீசார் மாணவியை போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து பேராசிரியர்களுக்கு உடந்தையாக இருந்த மாணவிகள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரவில் தூங்கும்போது மட்டும் வீடியோ, போட்டோ எடுத்தனரா? அல்லது குளிக்கும் போது, உடைகளை மாற்றும் போது ரகசியமாக போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளனரா? என்று மாணவிகளிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.

    மேலும், விடுதியில் உள்ள மற்ற மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள், கல்லூரியை சுற்றி உள்ள கிராம மக்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மனித உரிமை குழுவும் விசாரணை நடத்துவதற்காக திருவண்ணாமலைக்கு விரைவில் வருகின்றனர்.

    மாணவி பாலியல் புகாரில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக கூடும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவி குற்றம்சாட்டிய பேராசிரியர் ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கியவர் என்பது தெரியவந்துள்ளது. #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் சென்னை பெருங்குடியை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருக்கும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகிய 2 பேரும் தங்க பாண்டியனுக்கு சாதகமாக பேசிய ஒர்ஜினல் ஆடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் ஏ.டி.எஸ்.பி. வனிதாவிடம் மாணவி ஒப்படைத்துள்ளார்.

    இந்த நிலையில், தனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது. உண்மையை மறைக்க பார்க்கிறது. போலீஸ் விசாரணை மேம்போக்காக தன் மீதே பழி சுமத்துவதை போல் இருப்பதாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக மனித உரிமை அமைப்பு, முதல்வரின் தனிப்பிரிவு, பெண்கள் ஆணையம், தாழ்த் தப்பட்டோர் ஆணையம் என பல்வேறு தரப்பினருக்கும் தனித்தனியாக கடிதம் மூலம் மாணவி புகார் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய உதவி பேராசிரியர் தங்க பாண்டியனை பற்றி புதிய புகார்கள் பூதாகரமாக வெளியாகியுள்ளன. தங்கபாண்டியனின் பின்னணி குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

    அவர், ஏற்கனவே பணியாற்றிய கல்லூரியிலும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்டாமல் திருவண்ணாமலை கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இங்கு வந்த பிறகும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

    இதே கல்லூரியில் பணியாற்றிய, வாணாபுரத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் பணியாளர் ஒருவரும் தங்கபாண்டியன் மீது ஏற்கனவே புகார் அளித்துள்ளார். கல்லூரி நிர்வாகம், தங்க பாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.

    இதனால், அந்த பெண் பணியாளர் ‘ராஜினாமா’ கடிதம் கொடுத்து விட்டு வேலையில் இருந்து நின்று விட்டார். இந்த நிலையில், தற்போது சென்னை மாணவி கொடுத்த புகாரில் பேராசிரியர் தங்க பாண்டியன் சிக்கியுள்ளார்.

    மாணவி மீது திருட்டுபட்டம் கட்டி, பாலியல் புகாரை திசை மாற்ற முயற்சிப்பதாகவும் மாணவி தரப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். மாணவி தங்கியிருந்த விடுதியில் பெரும்பாலான அறைகளில் உள் தாழ்ப்பாள், வெளி தாழ்ப்பாள் இல்லை.

    இந்த விடுதியில் மொத்தம் 150 மாணவிகள் 72 அறைகளில் தங்கியுள்ளனர். இதில் பெரும்பாலான அறைகளில் தாழ்ப்பாள்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாணவி குற்றம் சாட்டுகிறார். பாலியல் புகார் கூறிய மாணவி, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,127 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இவ்வளவு மதிப்பெண் பெற்ற மாணவி பென்சில், பேனா திருடினார் என்றால் எவராலும் ஏற்க முடியாத குற்றச்சாட்டாக இருக்கிறது.

    ஆனால், மாணவி கூறிய பாலியல் குற்றச்சாட்டில் இதுவரை பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் மைதிலி, புனிதா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஏ.டி.எஸ்.பி. வனிதா விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டும் பேராசிரியைகள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் கல்லூரிக்கே நேரில் சென்று பேராசிரியைகளிடம் விளக்கம் கேட்டு விசாரித்து வருகின்றனர்.

    ஒரு புகாரில் சிக்கியவர்கள் மீது எப்.ஐ.ஆர். (முதல்தகவல் அறிக்கை) பதிவு செய்து கைது செய்தோ? அல்லது காவலில் வைத்து விசாரணை நடத்துவது தான் நடைமுறை. ஆனால், பேராசிரியர்கள் விவகாரத்தில் போலீசாரின் விசாரணை வழக்கத்திற்கு மாறாக உள்ளது.

    போலீசாரின் இது போன்ற விசாரணையால், மாணவிக்கு மிரட்டல் வருவதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பேராசிரியைகளிடம் வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் இன்றும் கல்லூரிக்கே சென்று விசாரணை நடத்தினர்.

    மாணவி கொடுத்த 6 நிமிட ஆடியோவை ஓட விட்டு பேராசிரியைகளிடம், அதுப்பற்றி கேள்வி எழுப்பினர். மாணவி புகாருக்கு பேராசிரியைகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மாணவி பாலியல் புகாரில் புதிய புதிய குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெளியாகி வருவதால், வேளாண்மை கல்லூரியில் நாள்தோறும் பரபரப்பு நீடிக்கிறது. இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் நிம்மதியிழந்து செயவதறியாமல் திகைப்பில் உள்ளனர். #ChennaiStudentharassment #AgriCollege

    ×