search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பை வாய் புற்றுநோய்"

    • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும்.
    • தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை 90 சதவீதம் தடுக்க முடியும்.

    உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000-க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஹெச்.பி.வி. தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    ஹெச்பிவி என்றால் என்ன?

    ஹெச்பிவி என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப்பெயர். இங்கு 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்.பி.வி. வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம்.

    இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும். ஆனால் அதிக ஆபத்துள்ள ஹெச்.பி.வி. வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

    ஹெச்.பி.வி. தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது?

    ஹெச்.பி.வி. தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்.பி.வி. தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

    ஹெச்.பி.வி. தடுப்பூசி யாருக்கு?

    ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்.பி.வி. பாதிப்பிற்கு முன் எடுத்துக் கொண்டால் அது சிறப்பாக செயல்படும். ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காத்துக்கொள்ள மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது.

    தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும்.

    யாருக்கு ஹெச்பிவி ஏற்படும்?

    ஹெச்.பி.வி. எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்.பி.வி. பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

    இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை. ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது.

    • வளர்ந்த நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
    • நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

    ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் இறக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

    எந்தவிதமான ஒழுங்குப்படுத்தப்பட்ட பரிசோதனையோ அல்லது HPV தடுப்பூசி திட்டங்களோ இல்லாத ஏழை நாடுகளில் வாழும் பெண்களுக்குத் தான் 90 சதவிகித கருப்பை வாய் புற்றுநோய் தாக்குகிறது. வளர்ந்த நாடுகளில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம், கடந்த முப்பது ஆண்டுகளில் அங்கு முறையான பரிசோதனை மற்றும் நோய் கண்டறிதல் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

    இந்த புற்றுநோய்க்கு சிகிச்சை என்று பார்த்தால், நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து மாறுபடும். ரேடிகல் ஹிஸ்டெரெக்டோமி அல்லது கீமோ ரேடியேஷன் அல்லது இரண்டும் சேர்த்து கூட சிகிச்சை அளிக்கலாம். கருப்பை வாய் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். இன்றைய காலத்தில் சிகிச்சை மூலம் பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் மூலம் குறைக்க முடியும்.

    எப்படி தடுப்பது?

    கருப்பை வாய் புற்றுநோய் ஒருவரை தாக்குவதற்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலம் ஏற்படும் தொற்றே முக்கிய காரணமாக இருக்கிறது. நாம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பழக்க வழக்கத்தை கடைப்பிடித்தால் கருப்பை வாய் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும்.

    பாதுகாப்பான உடலுறவு:

    உடலுறவில் ஈடுபடும் போது எப்போதும் காண்டம் அணிய வேண்டும்; அதையும் சரியாக அணிய வேண்டும். அப்போதுதான் HPV தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். அதிகமான நபர்களோடு பாலியல் உறவில் இருந்தால் HPV தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

     தடுப்பூசி:

    HPV தொற்று வராமல் தடுப்பதில் இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது. ஆண்களும், பெண்களும் இந்த HPV தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். பாலியல் உறவில் ஈடுபடும் போது இது சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

    முறையான பரிசோதனை:

    தகுந்த மருத்துவரிடம் சென்று Pap smears மற்றும் HPV பரிசோதனையை அவ்வப்போது மேற்கொள்ளுங்கள். ஆரம்பத்திலேய கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் வளர்ச்சி பெறுவதை தடுக்க முடியும்.

    புகைபிடிக்கும் பழக்கம்:

    புகை பிடிப்பதற்கும் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புகையிலையில் உள்ள தீங்குவிளைவிக்கும் பொருட்கள் கருப்பை வாயில் உள்ள செல்களை பாதித்து HPV தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் கருப்பை வாய் புற்றுநோய் தாக்கும் ஆபத்து குறைவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

    ஆரோக்கியமான வாழ்க்கைமுறை:

    பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சீரான உடற்பயிற்சி மூலம் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இவற்றோடு சேர்த்து அடிக்கடி கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். மருத்துவர் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

    • உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் ஆவர்.
    • 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும்.

    புதுடெல்லி:

    உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் ஆவர். இந்நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள், இந்தியாவில் நடக்கின்றன. இருப்பினும், இதை தடுப்பதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்து வருகின்றன. அதன் விலை ஒரு டோசுக்கு ரூ.4 ஆயிரம் ஆகும்.

    இந்தநிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே 'செர்வாவேக்' என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், சீரம் நிறுவனம் இத்தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மிகவும் மலிவான விலையில் இது கிடைக்கும். 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும் என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் அரோரா தெரிவித்தார்.

    ×