search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணாடி டம்ளர்"

    பிளாஸ்டிக் தடையால் கோவையில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடி டம்ளர்கள் வழங்கப்பட்டன. #Plasticban
    கோவை:

    ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து நேற்று முதல் கோவையில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடி டம்ளர்கள் வழங்கப்பட்டன.

    இதற்காக ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு பதிலாக தண்ணீர் பாட்டில்கள் மட்டும் விற்கப்பட்டன. சுண்டல், முட்டை பொடிமாஸ், வேர்க் கடலை உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளும் பாக்குமட்டை மற்றும் பனை ஓலைகளில் வைக்கப்பட்டிருந்தன.

    உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கியவர்களுக்கு வாழை இலையில் பொதிந்து கொடுக்கப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கறிக்கடைகளில் இறைச்சியை தாமரை இலையில் வழங்கினர்.



    ஓட்டல்களில் பிளாஸ்டிக் தாள்கள் அகற்றப்பட்டு முழுவதும் வாழை இலை பயன்படுத்தப்பட்டன. இதனால் வாழை இலை விற்பனை அமோகமாக இருந்தது. வாழை இலையில் சாப்பாட்டு இலை, டிபன் இலை, தலை வாழை இலை என பிரித்து வெட்டி விற்பனை செய்தனர். 1 டிபன் இலை ரூ.2.50, சாப்பாட்டு இலை ரூ4, தலைவாழை இலை ரூ.6, தள்ளவண்டிகடைகளுக்கு சிறிய இலை ரூ.1-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பிளாஸ்டிக் தடையைத் தொடர்ந்து மளிகை கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பிளாஸ்டிக் கவர் கொடுப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பல்வேறு வகையான துணிப்பைகள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    பணம் கொடுத்து பை வாங்கி தான் பொருட்களை எடுத்து செல்ல முடியும் என்பதால் தற்போது பொதுமக்கள் கடைக்கு செல்லும் போது வீட்டில் இருந்து துணிப்பை எடுத்து செல்வதை காண முடிகிறது.

    கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பிளாஸ்டிக் மாற்று பொருட்களுக்கு என தனியாக ஒரு அங்காடி உள்ளது. இங்கு ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பல்வேறு ரகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து இங்கு மாற்றுப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது வியாபாரிகளும் இங்கு வந்து மொத்தமாக மாற்றுபொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

    பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. வீடு மற்றும் கடைகளில் இருப்பு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தாமாக முன்வந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த் திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். இதையேற்று கடைக்காரர்கள் பலரும் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் கவர்களை ஒப்படைத்து வருகின்றனர்.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாக சென்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வருகின்றனர். இவற்றை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Plasticban
    ×