search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டட கலைகள்"

    • செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும்.

    ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    2. மாங்காட்டில் காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவம் இருக்கும் கோலத்தில் காட்சித் தருகிறாள்.

    3. அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள்.

    அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

    4. மாங்காடுக்கு வடமொழியில் "ஆம்ராரண்யம்" என்று பெயர்.

    அம்ரம் என்றால் மாமரம். அரண்யம் என்றால் காடு. எனவே ஆம்ராரண்யம் என்று அழைக்கப்பட்டது.

    5. காமாட்சி வருவதற்கு முன்பே மாங்காடு புண்ணிய பூமியாக இருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    6. மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர்.

    7. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள்.

    அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

    8. விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர்.

    மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியதுதான்.

    9. இவ்வாலயத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு ஸ்ரீசக்கரமே மூலஸ்தானமாக உள்ளது.

    10. இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    11. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    12. இத்திருக்கோவிலில் "எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு" பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப் படுகிறது.

    13. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    14. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது.

    சென்னையில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வர மாநகர பஸ் வசதி உள்ளது.

    15. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.

    16. மாங்காடு காமாட்சிக்கு ஆதிகாமாட்சி, தபஸ் காமாட்சி என்றும் பெயர்கள் உண்டு.

    17. இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது.

    18. மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை.

    19. மாங்காடு கோவிலில் அரசர்கள் காலத்தில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

    அந்த கல்வெட்டுகளில் 8 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

    20. கல்வெட்டுகளில் மாங்காட்டின் பெயர் "அழகிய சோழ நல்லூர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    21. சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    22. அன்னை காமாட்சியை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடி விடும்.

    23. இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும்.

    இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.

    24. மாங்காடு காமாட்சியை முன்பு பூஜை வைத்த ஏகாம்பரம் குருக்கள் பார்த்து இருப்பதாக செவி வழி செய்தி ஒன்றுள்ளது.

    25. கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வணங்கும் முறைகள் உள்ளன.
    • மாங்காட்டில் அனுஷ்டிக்கப்படும் வழி முறைதான் “ஆறு வார வழிபாட்டு முறையாகும்”.

    உலகில் பிறந்துவிட்ட அனைவருக்கும் ஏதேனும் ஒரு விதத்தில் மனக்குறைகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

    கவலைகளைப் போக்குவதற்கே அன்னை "காமாட்சி"யாக 'மாங்காடு பதி'யினிலே வடிவெடுத்திருக்கிறாள்.

    ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வணங்கும் முறைகள் உள்ளன.

    அதுபோல் மாங்காட்டில் அனுஷ்டிக்கப்படும் வழி முறைதான் "ஆறு வார வழிபாட்டு முறையாகும்".

    "ஆறுவார வழிபாடு" என்பது 'ஆறு முழுமையான வாரங்கள்' நமது கோரிக்கையை வைத்து அம்மனை வழிபடுவதாகும்.

    முதல் வாரம் செல்லும் போது வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய் போன்ற அர்ச்சனைப் பொருட்களுடன் மிக முக்கியமாக

    "இரண்டு" எலுமிச்சைப் பழங்களைக் கொண்டு சென்று,

    உங்கள் வேண்டுதலை அம்மனிடம் சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனை செய்தல் வேண்டும்.

    ஸ்ரீ அர்தமேரு ஸ்ரீ சக்ரத்துடன் கூடிய ஸ்ரீ ஆதிகாமாட்சியை தொழுதுவிட்டு,

    ஸ்ரீதபஸ் காமாட்சியை வணங்குகையில் நாம் வருவது எத்தனையாவது வாரம் என்று சொன்னால் "ஒரு" எலுமிச்சையைத் தருவார்கள்.

    அதைக் கொண்டு வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட்டு வருதல் வேண்டும்.

    இப்படி முதல் வார வழிபாடு முடிந்து அடுத்த வாரம் செல்கையில் வீட்டில் பூஜித்த எலுமிச்சையுடன் புதிதாக ஒன்றை வாங்கி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.

    இம்முறையும் ஸ்ரீ தபஸ் காமாட்சி சன்னதியில் ஒரு எலுமிச்சையைப் பெற்று வந்து இரண்டாவது வார வழிபாடு வீட்டிலேயே அனுஷ்டிக்க வேண்டும்.

    இது போன்றே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது வாரமும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீ காமாட்சியைத் தொழுது

    எலுமிச்சை பழையது புதியது இரண்டையும் கொடுத்து சன்னதியில் தரும் எலுமிச்சையைக் கொண்டு வந்து வீட்டில் பூஜிக்க வேண்டும்.

    ஆறாவது வார வழிபாட்டை வீட்டில் முடித்தவுடன் ஏழாவது முறையாக ஆலயத்திற்குச் சென்று ஆறுவார வழிபாட்டினை முறையாக முடிக்க வேண்டும்.

    நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். முதல் வாரம் எந்தக் கிழமையில் செல்கின்றீர்களோ அதே கிழமையில் அடுத்த வாரம் செல்லும் போதுதான் முதல் வார வழிபாடு பூர்த்தியாகிறது.

    மூன்றாவது முறை செல்லும் போது இரண்டாவது வார வழிபாடு பூர்த்தியாகிறது.

    அதே போன்று அதே கிழமைகளில் ஏழாவது முறை செல்லும் போதுதான் ஆறு வார வழிபாடு பூர்த்தியாகின்றது.

    அப்படி பூர்த்தியாகும் நாளன்று அர்ச்சனைப் பொருட்களுடன், நன்கு காய்ச்சிய பாலுடன் ஏலக்காய், கற்கண்டு, பச்சைக் கற்பூரம்,தேன் போன்றவற்றை

    வீட்டிலேயே கலந்து உங்கள் வசதிப்படி எந்த அளவு முடியுமோ அவ்வளவு எடுத்து வந்து அம்மனுக்கு நிவேதனம் செய்து பிரகாரத்தில் உள்ள பக்தர்களுக்கு விநியோகித்து ஆறுவார வழிபாட்டினை முடிக்க வேண்டும்.

    சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் நிவேதனப் பாலை வழங்கலாம்.

    இது பால் பிரியளான அம்மனுக்கே கொடுத்தது போலகும். இம்முறை எலுமிச்சையை வாங்குதல் கூடாது.

    இப்படி தொழுதால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது உறுதி.

    முடிந்தால் முதல் வாரம் செல்லும் கிழமைகளிலேயே மற்ற ஆறு வாரங்களும் சென்று வந்தால் நலம்.

    ஆனால் பெண்களுக்கு இது அவ்வளவாகப் பொருந்தாது.

    அப்போது மாற்றுக் கிழமைகளில் சென்று வரலாம். தவறில்லை.

    ஆறுவார வழிபாட்டின் போது இந்நூலிலுள்ள ஆறுவாரப் பாடல்கள் மற்றும் துதிப் பாடல்களைப் பாடித் துதித்தால் வெற்றி நிச்சயம்.

    ஏனெனில் இவை பலகாலம் அம்மன் சன்னதியில் பாடப்பெற்று அம்மனால் ரசிக்கப்பட்டவையாகும்.

    மேலும் வீட்டில் எலுமிச்சையை வைத்துப் பூஜிக்கும் போது ஸ்ரீ அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்துடன் கூடிய காமாட்சி அம்மன் படத்தின் முன் வைத்து அர்ச்சித்துப் பூஜிக்க வேண்டும்.

    • இந்த காமாட்சி பஞ்சலோகத்தால் ஆனதாகும்.
    • ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.

    ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரத்தின் காரணத்தால் அக்னியின் ஆவேசம் படிப்படியாகக் குறைந்து வந்தது.

    இருந்த போதிலும் மக்கள் அம்மனை தரிசிக்கவும் ஆலயத்தில் பிரவேசிக்கவும் அஞ்சினர்.

    அந்த அச்சத்திற்குக் காரணமாய் இருந்தது அங்கிருந்த தவக் காமாட்சி விக்ரகமேயாகும்.

    இதனால் பல ஆண்டு காலம் அம்மன் சன்னிதானம் பிரசித்தியடையாமலேயே இருந்து வந்தது.

    ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மிகவும் பிரபலமாகி பக்தர்கள் பலகோடி சென்று வருவதற்கும் காரணம் இருக்கின்றது.

    ஆதிசங்கரர் வழி வந்த காஞ்சிப் பெரியவர்கள் தன் ஞானத்தால் மக்கள் அங்கு அதிகமாய் செல்லாததின் காரணத்தைக் கண்டு அதையறிந்து மாங்காடு சென்றார்.

    தான் அறிந்ததை நடைமுறைப்படுத்தினார்.

    அதாவது தவக் கோலத்தில் இருந்த காமாட்சியை மூலஸ்தானத்திலிருந்து எடுத்து அதை அக்கோவிலின் இடது புறத்தில் வைத்தார்.

    பின்னர் மூலஸ்தானத்தில் ஓர்கையில் கிளியோடும் மறுகையில் கரும்போடும் கூடிய சாந்தமான காமாட்சியைப் பிரதிஷ்டை செய்தார்.

    இதனால் மாங்காடு மூலஸ்தான அம்மன் "ஆதி காமாட்சி" என்று விளங்குகிறார்.

    இந்த காமாட்சி பஞ்சலோகத்தால் ஆனதாகும்.

    ஆடிப்பூரம் அம்மனுக்கு உகந்த நாளாகும்.

    சித்ரா பவுர்ணமி, நவராத்திரி, ஆடிப்பூரம் போன்றவை மாங்காட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    • “உரு ஏறத் திரு ஏறும்” என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.
    • ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.

    1960ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சாமிகள் மாங்காட்டிற்கு விஜயம் செய்தார்.

    வேண்டுவார் வேண்டுவதை அருள வல்லதும், ஸ்ரீ ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான மகா தெய்வீக சக்திகள் வாய்ந்த ஓர் அர்தமேரு அங்கு இருந்தும் கூட,

    அதை தரிசித்துப் பயன்பெறுவதிலே மக்கள் அவ்வளவாக ஆர்வம் இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களது கருணை உள்ளம் வேதனை அடைந்தது.

    தான் வழக்கமாகப் படுத்து உறங்கும் கட்டிலுக்கு அடியிலே ஒரு பெரும் புதையல் இருப்பதை அறியாமல்,

    ஒருவன் நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் பிச்சை எடுத்தே வயிறு வளர்த்து வந்தானாம்.

    அதே போல், அள்ள அள்ளக் குறையாத ஓர் அளப்பரும் திருவருட் களஞ்சியம் மாங்காட்டிலே இருந்தும்,

    அதை அறியாமல் மக்கள் தம் குறைகளைப் போக்கிக் கொள்வதற்காக எங்கெங்கோ அலைந்து ஏங்கித் தவிக்கிறார்களே என்று

    ஸ்ரீஅச்சய சாமிகள் இரக்கம் கொண்டார்கள்.

    அங்குள்ள பரம்பரை அர்ச்சகராகிய மறைத்திரு ஏகாம்பர சிவாச்சாரியாரிடத்தில் இது பற்றி உரையாடினார்கள்.

    காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய சாமிகளின் ஆணையை சிரமேற்கொண்டு, அவர்கள் காட்டிய நெறியே நின்று,

    ஆலயத்தினுள்ளே நாள் தோறும் தீவிரமான ஜபயோக சாதனையில் ஈடுபடலானார் ஸ்ரீஏகாம்பர சிவாச்சாரியர்.

    அதன் பலனைத்தான் இன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வந்து பெருகி வழிகின்ற பக்தர்களின் கூட்டத்திலே நாம் பார்த்து மகிழ்கிறோம்.

    "உரு ஏறத் திரு ஏறும்" என்பது ஆன்றோர் கண்ட அனுபவ உண்மை.

    அந்த நியதிப்படியே, சிவாச்சார்யரின் ஜபயக்ஞம் ஏறஏற, ஆலயத்திற்கு வரும் மக்களின் கூட்டமும் பெருகிக் கொண்டே வந்தது.

    கோவில் அதிகாரிகளால் எளிதில் சமாளிக்க முடியாத அளவுக்கு, இன்னமும் பெருகிக் கொண்டே வருகிறது.

    • ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும்.
    • நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள்.

    குழந்தை பேறு, வேலை வாய்ப்பு போன்றவற்றை தரும் அற்புதமான தலமாகவும் மாங்காடு தலம் திகழ்கிறது.

    திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    வெள்ளி மற்றும் பவுர்ணமியில் ஊஞ்சல் சேவை நடக்கிறது.

    நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள்.

    இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது.

    பவுர்ணமி தோறும் 9 கலசங்களில் 9 சக்திகளை ஆவாசனம் செய்து நடத்தப்படும் நவகலச ஹோமமும், புஷ்பாஞ்சலியும் மிகவும் பிரசித்தம்.

    தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும்.

    ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும்.

    இத்தலத்தில் ஆதியில் அம்மன் புற்றில் இருந்ததாக கருதப்படுகிறது.

    புற்றுருவில் இருந்த அம்மன் மாடு மேய்க்கும் ஒரு சிறுவன் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

    கோவில் வட திசையில் திருக்குளம் உள்ளது.

    பிரச்சினைகள் தீர, 18,27,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்ச மாலை சாற்றி வழிபடலாம்.

    புரட்டாசி பவுர்ணமியன்று நடக்கும் நிறைமணி தரிசனத்தில் கலந்து கொண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    • இங்கே அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் திருமணத் தடைகள் நீங்கும்
    • கல்வியில் முதன்மை, தொழில் விருத்தி மற்றும் செல்வ சுக போகமும் கிடைக்கும்.

    நவ கன்னிகைகள் சந்நிதியும் மனதிற்கு அமைதியைத் தருகின்றது.

    அம்மன் தவமிருக்க ஆரம்பிக்கும் பொழுது, தன் தவத்திற்குக் காவலாக எட்டு கன்னிகைகளுக்கு காவல் பணியைக் கொடுத்தாள்.

    அம்மனோடு சேர்த்து ஒன்பது கன்னிகைகளாக கோவிலிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

    மாங்காடு காமாட்சி அம்மனின் கோவில் உள் வடிவமைப்பு சுமார் 4,500 சதுர அடி பரப்பளவு உள்ளதாகும்.

    நம் துன்பங்கள் நீங்குவதற்கு மாங்காடு அம்மன் திருவருள் துணைபுரியும்.

    தடைகள் மற்றும் தீமைகளை நீக்கி நலம் நல்குவாள் காமாட்சி அன்னை.

    எதிலும் வெற்றி அடைய வேண்டுமெனில் காமாட்சி அம்மனின் கருணையை மாங்காடு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

    சிவன், விஷ்ணு, பிரம்மன், எமன், இந்திரன் முதலிலிய தேவர்களின் சக்திகளைத் தன்னுள் அடக்கி இருப்பவள் மாங்காடு காமாட்சி.

    இங்கே அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் திருமணத் தடைகள் நீங்கும்.

    கல்வியில் முதன்மை, தொழில் விருத்தி மற்றும் செல்வ சுக போகமும் கிடைக்கும்.

    உடல்ரீதி யான உபாதைகளுக்கும் காமாட்சி அம்மனை தரிசித்து வேண்டிக் கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

    மாங்காடு அம்மன் கோவிலிலில், எலுமிச்சம் பழ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது மட்டு மல்ல; தங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்கிற அளவற்ற, அசைக்க முடியாத நம்பிக்கையூட்டுவதுமாகும்.

    இந்த பூஜை முறையில் எலுமிச்சம் பழத்தை அம்மனாக மனதில் பாவித்து வழிபடுதல் விசேஷம் ஆகும்.

    • ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.
    • பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.

    மாங்காடு தலத்தில் கோவிலிலின் கோபுர வாசலைக் கடந்து, உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது.

    வினைதீர்க்கும் விநாயகரை வணங்கி விட்டு உள்ளே சென்றால் முருகக் கடவுளையும், ஆதிசங்கரரையும் வணங்கலாம்.

    சூரியன், பைரவர், மேலும் ஒரு விநாயகரைத் தரிசித்தபின் துவார பாலகர் நின்றிருக்கும் வழியாகச் சென்றால் சபா மண்டபத்தை அடையலாம்.

    தவம் செய்யும் காமாட்சி அன்னையின் சந்நிதி தனியாக உள்ளது.

    பஞ்சாக்னியில் காமாட்சி அம்மன் நிற்கும் கோலம் தனிச் சிறப்புடையது.

    உள்ளே கருவறையில் ஸ்ரீ சக்கரம் உள்ளது.

    ஸ்ரீ சக்ரத்திற்குப் பின் பஞ்சலோக காமாட்சி காட்சி கொடுக்கிறாள்.

    ஸ்ரீ சக்கரம் கூர்ம (ஆமை) ஆசனத்தில் அமையப் பெற்றுள்ளது.

    கருவறைக்குள் தரிசனம் முடிந்தபிறகு வெளிப் பிராகாரச் சுற்றில் கணபதியையும் சண்டியையும் தரிசனம் செய்யலாம்.

    பல இடங்களில் அனுமனின் திருவுருவங்கள் உள்ளன.

    • காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.
    • கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    தெய்வங்கள்கூட மிக்க வைராக்கியத்துடன், தாங்கள் நினைத்ததைச் சாதிக்கின்றனர்.

    ஊண், உணவு, உறக்கம் இழந்து, தவமாய் தவமிருந்து தாங்கள் அடைய வேண்டியதை அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இதற்கு உதாரணமாய்த் திகழும் தெய்வம் மாங்காடு காமாட்சி அம்மன்!

    காமாட்சி என்றால் கருணையும் அன்பும் நிறைந்தவள் என்று அர்த்தம்.

    கடுந்தவம் இருந்து ஈஸ்வரனை அடைந்தவள் காமாட்சி அம்மன்.

    நினைத்ததைச் சாதித்துப் பெற்றாள் இந்த அம்மன்.

    • அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.
    • மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    இதன் நடுவே பத்ரபீடத்தின் மீது பஞ்ச அக்னிகள் சுவாலையுடன் தோன்ற, நடுவே உள்ள சுடரின் பின்புறம் காமாட்சி

    ஒரு மா மரத்தின் முன்புறம் இடது காலை ஊன்றி வலது காலை மேல் தூக்கி வளைத்து ஒற்றைக்காலில் தவம் செய்யும் காட்சி செப்புத் திருமேனியாக காணப்படுகிறது.

    அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.

    வலது கை உத்திராட்ச மாலையை சின் முத்திரையில் பற்றிய நிலையில் உச்சித் தலைமீது காட்டப்பட்டுள்ளது.

    இடது கரம் மார்புக்குக் குறுக்கே தியான கரமாக நீண்டுள்ளது.

    கட்டை விரலும், சுட்டு விரலும் இணைந்து சின் முத்திரை காட்டும் நிலையிலும் ஞானக்கரங்களுடன் தவ நிலையில் தோன்றும் காமாட்சி ஆன உடையாளுடைய திருமேனிகள் காண்பதரிது.

    ஆனால் இங்கு காமாட்சியின் தவக்காட்சி பஞ்சலோகங்களில் வார்க்கப்பட்டு வனப்போடு காட்சியளிக்கிறது.

    அன்னை ஒற்றைக்காலில் நிற்கும் நிலை தியானத்தைச்சுட்டும் கரங்கள், அக்கமாலை ஏந்தி சின் முத்திரை காட்டும் கரம், முகப்பொலிவு, காமரூபினியாக காணப்படும்.

    கண்களின் கனிவு, யாவும் காண்போரை வியக்க வைக்கிறது. சமய வாதிகளைச் சிந்திக்க வைக்கிறது.

    பாமர மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

    ஆன்மீக வாதிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இச்செப்பு வடிவம் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

    • பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
    • இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களில் மயில் வாகனம், கொடிப்பெண், குந்துச்சிம்மன், சீரும்யாளி, யானை, யானை மீது சிம்மம் சண்டை செய்யும் காட்சி, தாமரை மலர் ஏந்தி நிற்கும் சூரியன், அழகிய அன்னம் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இம்மண்டபத் தூண்கள் கீழும் மேலும் நடுவிலும் சதுரமாக அமைந்து இடைப்பகுதி 16 பட்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு முக மண்டபத்தூண்களும், பதினாறு (16) பட்டைகளுடன் அலங்கரிக்கின்றன.

    இரண்டாம் திருச்சுற்று மிகப்பெரிய அளவில் அண்மைக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இப்பிரகாரத்தின் வடதிசை வாயிலில் பெரிய கோபுரம் உயர்ந்த நிலையில் ஏழு நிலைகளை உடைய கோபுரமாக அமைந்து காட்சி அளிக்கிறது.

    பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.

    • சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.
    • சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இது அதிஸ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு(6) அங்கங்களை உடையதாக அமைந்துள்ளது.

    அதிட்டானம் என்னும் அடிப்பகுதி உபானம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை என்னும் ஆறு உறுப்புகளை உடையது.

    அதிட்டானத்தைச் சுற்றிலும் விஜயநகரக் கால கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    அதிட்டானத்தின் மேல் அம்மன் கோவில் சுவர் பகுதி எழுப்பப்பட்டுள்ளது.

    சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    கருவறைச் சுவரில் தெற்கு, மேற்கு வடக்கு ஆகிய திசைகளில் தேவகோஷ்ட மாடங்கள் அலங்கரிக்கின்றன.

    மாடங்களின் பக்கங்களில் அரைத் தூண்களும், மேற்புறம், கூரை, கிரீவம், சாலை வடிவுடைய சிகரம் ஆகிய பகுதிகளுடன் கோஷ்ட மாடங்கள் காணப்படுகின்றன.

    சுவரின் பக்கங்களில் உள்ள அகாரை என்னும் பகுதியில் ஒற்றைக் கால் பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன.

    சுவரின் மேல் கூரை என்னும் பிரஸ்தரம் அமைந்துள்ளது.

    இது எழுதகம், கபோதகம், வியாளம் என்னும் மூன்று உறுப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது.

    கூரை மேல் விமானத்தளம் அமைந்துள்ளது.

    இத்தளங்கள் கர்ணக்கூடு, சாலை, பஞ்சரம், என்னும் உறுப்புகளுடன் மாறி மாறி அலங்கரிக்கின்றன.

    தளங்களைச் சுற்றிலும் அழகிய சிற்ப வடிவங்கள் கதை உருவங்களாகக் காணப்படுகின்றன.

    விமான கிரீவம் செவ்வக வடிவுடையது.

    கிரீவத்தின் மேல் சாலை வடிவுடைய சிகரம் அலங்கரிக்கின்றது.

    சிகரங்களின் பக்கங்களில் மகாநாசிகள் அலங்கரிக்கின்றன.

    சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இவ்விதம் அம்மன் கோவில் விமானம் அதிட்டானத்திலிருந்து பிரஸ்தனம் வரை கருங்கல் திருப்பணியாக அமைந்துள்ளது.

    அதன் மேல் உள்ள தளங்களும், கிரீவம் மற்றும் சிகரப்பகுதிகள் செங்கல்லும் சுதையும் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.

    விமானம் சுமார் 30 அடிக்கும் மேல் உயரம் உடையது. கி.பி. 15,16 ஆம் நூற்றாண்டுகளில் இவ்விமானம் எழுப்பப்பட்டுள்ளது.

    • கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.
    • கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    தொண்டை நாட்டின் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்றது.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலைப் போன்றே மாங்காடு அம்மன் கோவிலும் சமயச் சிறப்பும் கலைச்சிறப்பும் பெற்றது.

    இயற்கையான சூழலில் மக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

    சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோவில் விஜய நகர காலத்தில் முழுமையான திருப்பணிப் பெற்று விரிவு படுத்தப்பட்டுள்ளது.

    இக்கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகமண்டபம், முகப்பு மண்டபம், முதல் திருச்சுற்று பிரகாரம், இரண்டாம் திருச்சுற்று கோபுர வாயில் போன்ற பல்வேறு பகுதிகளைப் பாங்குறப் பெற்றுத் திகழ்கிறது.

    கோவில் கருவறை சதுர வடிவுடையது. கருவறை சுவரை ஒட்டி அம்மன் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.

    கருவறை முன் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.

    இது தூண்கள் எதுவுமின்றி சதுரவடிவில் எளிமையாக காணப்படுகிறது.

    அம்மன் கோவில் கருவறை மற்றும் அர்த்த மண்டப புறச்சுவர்களில் பஞ்ச கோஷ்டங்கள் அமைந்துள்ளன.

    இக்கோஷ்டங்களில் மூன்று மாடங்களில் இறைவடிவங்கள் அமைக்கபட வில்லை.

    பொதுவாக சக்திகளின் வடிவங்கள் அமைக்கப் படுவதுண்டு.

    இங்கு அர்த்த மண்டப கோஷ்டம் ஒன்றில் இடம்புரி விநாயகரின் சிற்பவடிவம் ஒன்று அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது.

    இதன் மேற்கரங்கள் அங்குசத்தையும், பாசத்தையும் பற்றியுள்ளது.

    கீழ்வலக்கரம் தந்தத்தை கடக முத்திரையில் பிடித்துள்ளது.

    கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    மற்றொரு கோஷ்டத்தில் காளியின் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் சுற்றி வலம்வர திருச்சுற்று பாதை உள்ளது.

    திருச்சுற்று பாதையைச் சுற்றிலும் உருளை வடிவிலான கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களின் மேல் பகுதி வெட்டுப் போதிகையுடன் உள்ளது.

    இந்த திருச்சுற்றை அலங்கரிக்கும் பகுதிகள் இடைச்சோழர் காலத்தவை.

    கன்னியாகுமரியில் அம்மன் கோவில் திருச்சுற்றுத் தூண்களை ஒத்த அமைப்பில், இவை காணப்படுகின்றன.

    ×