search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் பாடலீஸ்வரர் கோவில்"

    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நடு நாட்டு திருத்தலங்களில் ஒன்றான கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனையும், அதைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்தி, கோவிலை வலம் வந்து, வெளிமண்டபத்துக்கு வந்தனர்.

    தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரரும், சிறிய தேரில் விநாயகர், அஸ்திரதேவரும், மற்றொரு சிறிய தேரில் அம்மனும், இன்னொரு தேரில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் எழுந்தருளினர்.

    இதைத்தொடர்ந்து பாடலீஸ்வரரின் தேரை கலெக்டர் அன்புசெல்வன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அப்போது பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேர் வலம் வந்தது. தேரடித்தெருவில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட திருத்தேர், சுப்புராய செட்டித்தெரு, சங்கரநாயுடு தெரு, சஞ்சிவிநாயுடு தெரு, போடி செட்டித்தெரு வழியாக மதியம் 1.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது. இதில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருத்தேர் வலம் வந்த ராஜவீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நீர், மோர், அன்னதானம், சுண்டல், கேசரி ஆகியவற்றை வழங்கினார்கள். தேரோட்டம் நடந்த போது கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக வழியில் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் பாடலீஸ்வரருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, வேல்விழி, தலைமை எழுத்தர் ஆழ்வார், கோவில் குருக்கள் நாகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நின்றனர். மேலும் சுகாதாரத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

    அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    பின்னர் இரவு 7 மணியளவில் தேரில் இருந்து இறங்கிய பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு தேரடியில் மண்டகபடி பூஜையும், 8.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருக்கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் 10-வது நாளான இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம், திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரியும், இரவு முத்து பல்லக்குகளில் ராஜவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

    11-ம் நாள் விழாவான நாளை(ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும், 12-ம் நாள் விழாவான நாளை மறுநாள்(திங்கட்கிழமை ) காலை 6.30 மணிக்கு அறுபத்து மூவர் தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகமும், இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நிகழ்ச்சியும், 13-ம் நாள் விழாவான வருகிற 21-ந் தேதி காலை 8.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டேஸ்வரர் வீதி உலாவும் நடக்கிறது.
    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பழமையும், பெருமையும் வாய்ந்த பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வைகாசி பெருவிழாவின் 9-வது நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு அலங்காரமும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி சாமிகள், கோவிலை வலம் வந்து, வெளிமண்டபத்துக்கு வந்தனர். தொடர்ந்து மேளதாளங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்தி சாமிகள் தேரை வந்தடைந்தனர்.

    பின்னர் தேரின் சக்கரங்களுக்கு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து தேரோட்டத்தை சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.


    பாடலீசுவரர் கோவில் வைகாசி திருவிழாவில் நடந்த தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவதற்காக பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேர் வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரரும், சிறிய தேரில் அம்மனும், இன்னொரு தேரில் முருகப்பெருமானும் ராஜவீதிகளில் வலம் வந்தனர்.

    தேரடித்தெருவில் இருந்து புறப்பட்ட திருத்தேர், சுப்புராய செட்டித்தெரு, சங்கர நாயுடு தெரு, சஞ்சிவிநாயுடு தெரு, போடி செட்டித்தெரு வழியாக மதியம் ஒரு மணி அளவில் நிலையை வந்தடைந்தது. திருத்தேர் வலம் வந்த ராஜவீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நீர், மோர் வழங்கினார்கள். தேரோட்டம் நடந்த போது கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, நாகராஜன், கோவில் குருக்கள் நாகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
    கடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா 20-ந்தேதி முதல் வருகிற 1-ந்தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது.

    இத்திருவிழா நேற்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர்-பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், உற்சவர் பஞ்சமூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து கொடிமரம் அருகில் உற்சவர் பஞ்சமூர்த்தி கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதன்பிறகு ராஜவீதியில் இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உற்சவமூர்த்திகள் கோவிலை வந்தடைந்தனர். திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் ராஜவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 24-ந்தேதி காலையில் அதிகார நந்தி தரிசனமும், இரவில் தெருவடைச்சான் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 28-ந்தேதி காலை 9 மணி முதல் 10-30 மணிக்குள் தேரோட்டமும் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 30-ந்தேதி இரவில் முருகப்பெருமான் சிவகரதீர்த்தக்குளத்தில் தெப்பத்தில் காட்சி தரும் நிகழ்ச்சியும், 31-ந்தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியும், இரவில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. 1-ந்தேதி சண்டிகேசுவரர் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, நாகராஜ் குருக்கள் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். 
    ×