search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம்
    X

    கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பழமையும், பெருமையும் வாய்ந்த பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வைகாசி பெருவிழாவின் 9-வது நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு அலங்காரமும் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி சாமிகள், கோவிலை வலம் வந்து, வெளிமண்டபத்துக்கு வந்தனர். தொடர்ந்து மேளதாளங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்தி சாமிகள் தேரை வந்தடைந்தனர்.

    பின்னர் தேரின் சக்கரங்களுக்கு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து தேரோட்டத்தை சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.


    பாடலீசுவரர் கோவில் வைகாசி திருவிழாவில் நடந்த தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவதற்காக பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என்ற பக்தி கோஷங்கள் முழங்க திருத்தேர் வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரரும், சிறிய தேரில் அம்மனும், இன்னொரு தேரில் முருகப்பெருமானும் ராஜவீதிகளில் வலம் வந்தனர்.

    தேரடித்தெருவில் இருந்து புறப்பட்ட திருத்தேர், சுப்புராய செட்டித்தெரு, சங்கர நாயுடு தெரு, சஞ்சிவிநாயுடு தெரு, போடி செட்டித்தெரு வழியாக மதியம் ஒரு மணி அளவில் நிலையை வந்தடைந்தது. திருத்தேர் வலம் வந்த ராஜவீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நீர், மோர் வழங்கினார்கள். தேரோட்டம் நடந்த போது கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, நாகராஜன், கோவில் குருக்கள் நாகராஜ் மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×