search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐடிஐ மாணவர் கொலை"

    • கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்சினையில் ஐ.டி.ஐ. மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கணக்கபிள்ளையூரை சேர்ந்தவர் மனோகரன் மகன் குரு பிரகாஷ்(வயது 19). இவர் அய்யர்மலை பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. கணிதம் படித்து வருகிறார். இவரது பெரியப்பா மகன் அதே ஊரைச் சேர்ந்த மோகன் மகன் விக்னேஷ் (16). இவர் வை.புதூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு எலக்ட்ரீசியன் படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று குருபிரகாஷ் கல்லூரி இறுதி நாள் வகுப்பை முடித்துவிட்டு ஊருக்கு செல்ல அய்யர்மலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். இதற்கிடையே குரு பிரகாசுக்கும், அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கும் கடந்த ஆறு மாத காலமாக காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக அவர்களுக்கிடையே எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தது.

    இதற்கிடையே கல்லூரி மாணவி கீழ குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார் என்கிற அருண் (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த குருபிரகாஷ் ஆத்திரம் அடைந்தார். இதுபற்றி அவர் கல்லூரி மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதோடு, கடுமையாக திட்டியுள்ளார். இதனை அந்த மாணவி ஆட்டோ டிரைவர் அருணிடம் தெரிவித்துள்ளார்.

    இதைக்கேட்ட அருண் கடந்த 14-ந்தேதி குருபிரகாசிடம் எப்படி நீ போன் செய்யலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அருணின் தம்பி சங்கர், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் செல்லதுரை ஆகியோர் கல்லூரிக்கு வந்து, அருணிடம் மன்னிப்பு கேட்க வருமாறு குருபிரகாசை அழைத்துள்ளனர். ஆனால் குருபிரகாஷ் மறுத்துவிட்டார். பின்னர் கல்லூரி வகுப்பு முடிந்து ஊருக்கு செல்வதற்காக அய்யர்மலை பஸ் ஸ்டாப்பில் குரு பிரகாஷ், அவரது பெரியப்பா மகன் விக்னேஷ் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் அருண், கல்லூரி மாணவர் செல்லத்துரை இருவரும் சேர்ந்து குரு பிரகாசை கீழே தள்ளி கையாளும், கம்பாலும் சரமாரியாக தாக்கினர். அதனை தடுக்க வந்த ஐ.டி.ஐ. மாணவர் விக்னேசும் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்தவர்களை அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் விக்னேசை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். காதல் தகராறில் ஐ.டி.ஐ. மாணவரை அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் அருண், கல்லூரி மாணவர்கள் செல்லத்துரை, விஜய், சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் அருண், செல்லத்துரை, சரவணன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தலைமறைவான கல்லூரி மாணவர் விஜயை தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட காதல் பிரச்சினையில் ஐ.டி.ஐ. மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×