search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்பி பல்வீர்சிங்"

    • பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை போலீஸ் சரகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் 10 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.கே.புரம் இன்ஸ்பெக்டராக இருந்த பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி வட்ட இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதேபோன்று மாவட்ட உளவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்து பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கோமதி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் கேட்டு கொள்ளப்பட்டது.
    • வி.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய 2 சாட்சிகள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் கேட்டு கொள்ளப்பட்டது. ஆனால் யாரும் ஆஜராகாததால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஏ.எஸ்.பி. பல்வீர்சிங்கின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இசக்கிமுத்து, சதாம் உஷேன் மற்றும் டிரைவர்கள் விவேக், ஆண்ட்ரூஸ் ஆகிய 4 போலீசார் நேற்று நெல்லை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    இந்நிலையில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வி.கே.புரத்தை சேர்ந்த மாரியப்பன் மற்றும் ரூபன் ஆகிய 2 சாட்சிகள் இன்று நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தில் ஏற்கனவே விசாரணை நடத்திய அறிக்கையை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன்ரகு, சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. நவராஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார்.

    தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்த அதே பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே புகார் கூறிய கே.டி.சி. நகரை சேர்ந்த சுபாஷ், அவரது மனைவி சங்கீதா, அவர்களது வக்கீல் உள்பட 5 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். இதைத்தொடர்ந்து அவர்கள் பாளையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி ஆஜாராகி விளக்கமளிக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.
    • அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வரும் அம்பை தாலுகா அலுவலகம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் பரிந்துரைத்திருந்தார். இதனை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 10-ந்தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை.

    இந்நிலையில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களும் விசாரணை அதிகாரி அமுதா தலைமையில் மீண்டும் 2-ம் கட்ட விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை தொடங்கியது. இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து நெல்லை வந்தடைந்தார். இன்று காலை விசாரணை தொடங்கியதையொட்டி தாலுகா அலுவலகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து, பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி ஆஜாராகி விளக்கமளிக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.

    மேலும் வி.கே.புரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், அவரது தாயார் ராஜேஸ்வரி மற்றும் 16 மற்றும் 17 வயதுள்ள 2 சிறுவர்கள் என 5 பேர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் 5 பேரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகினர்.

    அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வரும் அம்பை தாலுகா அலுவலகம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு வருபவர்கள் காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறலாம் என்பதால், தாலுகா அலுவலகத்தில் உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து காவலர்களையும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேற்றுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

    • தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
    • சர்ச்சைக்குள்ளான போலீஸ் நிலையங்களில் புதிய இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பிடுங்கியதாக எழுந்த புகாரையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்பட சில போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

    இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான இந்த போலீஸ் நிலையங்களில் புதிய இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக மகேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுஜித் ஆனந்த் வி.கே.புரத்திற்கும், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    • அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையை தொடங்கினார்.
    • கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், அம்பை போலீஸ் நிலையங்களிலும் நேரடியாக சென்று விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரி அமுதா நேற்று நெல்லை வந்தார். தொடர்ந்து கலெக்டரிடம் சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் நேற்று மாலையில் அதிகாரி அமுதா, தனது விசாரணையை தொடங்கினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையை தொடங்கினார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே சப்-கலெக்டரிடம் வாக்குமூலம் அளித்தவர்களில் ஒரு சிலர் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி நடந்தவற்றை கூறினர். அதனை அவர் பதிவு செய்து கொண்டார்.

    இதனையொட்டி தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவு இழுத்து பூட்டப்பட்டது. போலீசார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து விசாரணை அதிகாரி அமுதா, உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்கள், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீசார் என அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணை நடத்த உள்ளார்.

    அதேபோல் கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், அம்பை போலீஸ் நிலையங்களிலும் நேரடியாக சென்று விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • மேலும் சில போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் சில போலீசார் மீது புகார் எழுந்தது.

    இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் மீதான புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே வி.கே.புரம் தனிப்பிரிவு ஏட்டு போக பூமன், கல்லிடைக்குறிச்சி தலைமை காவலர் ராஜ்குமார் ஆகியோரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று முன்தினம் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்

    இதற்கிடையே நேற்று இரவு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி சென்னைக்கும், அம்பை சரக உளவுப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் போலீஸ் நிலைய பணிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகர உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் அதிசயராஜ்க்கு, நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே மேலும் சில போலீஸ் அதிகாரிகள், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • சேரன்மாகாதேவியில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • பாதிக்கப்பட்டவர்கள் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 3 பேர் போலீசாருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர்சிங், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் வைரலானது.

    இதைத்தொடர்ந்து பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டு குறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த சம்பவத்தை வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டது.

    அதன்படி, பாதிக்கப்பட்ட வாலிபர்கள் 5 பேர் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். அப்போது அவர்கள் உதவி போலீஸ் சூப்பிரண்டு மட்டுமல்லாமல் காவல்துறையை சேர்ந்த வேறு சிலரும் கடுமையாக நடந்து கொண்டதாகவும், உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது புகார் அளிக்காமல் இருக்க போலீசார் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தனர்.

    இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் இன்று மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் இன்று ஆணையத்தின் முன்பு ஆஜராகிறார்.

    அதேநேரம் சேரன்மாகாதேவியில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 3 பேர் போலீசாருக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக வி.கே.புரம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு காவலர் போக பூமன், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டவர்களே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அம்பை தனிப்பிரிவு காவலர் அல்லாமல், வி.கே.புரம் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

    இந்த சம்பவங்கள் நடந்தபோது பணியில் இருந்து இன்ஸ்பெக்டர், காவலர்கள் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கூறி வருகின்றனர். இதனால் இன்னும் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    • புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர்ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.
    • மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

    இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

    • உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர்ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், குற்றவழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் புகார் தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது சபீர்ஆலம் விசாரணை நடத்தி வருகிறார்.

    பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட இதுவரை 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வருகிற 10-ந் தேதி வரை எழுத்துப்பூர்வமாக தங்களது புகார் மனுவை தாக்கல் செய்யலாம் எனவும், சப்-கலெக்டர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, வேதநாராயணன், இசக்கி முத்து, சுபாஷ் உள்ளிட்ட 5 பேர் இன்று சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து மனித உரிமைகள் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.

    • அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது.
    • சூர்யா தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, இந்த புகார் தொடர்பான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    உதவி கலெக்டர் முன் ஏற்கனவே லட்சுமிசங்கர், சூர்யா, சுபாஷ் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரிடமும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்தநிலையில் நேற்று வெங்கடேஷ் என்ற வாலிபர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முன்பு ஆஜரானார். அவரிடம் உதவி கலெக்டர் விசாரித்து விளக்கம் பெற்றார்.

    இதற்கிடையே சூர்யா, தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், 2 பெண் போலீசார் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
    • பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் போலீசாருக்கு ஆதரவாக சூர்யா போல் வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் நேற்று அவர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    அவர் மீதான புகார் தொடர்பாக சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லெட்சுமி சங்கர் ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முன்பு ஆஜரானார். அவரிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, தான் கீழே விழுந்ததில் பல் உடைந்து விட்டது என்றார்.

    அதன்பின்னர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், 2 பெண் போலீசார் உள்பட 4 போலீசார் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் 7 பேர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அலுவலகம் முன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    இதில் சம்மன் அனுப்பப்பட்ட சுபாஷ் என்பவரிடம் மட்டுமே உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வந்தனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் சம்மன் திருத்தி அனுப்பிய பின்னர் இன்று காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வெங்கடேஷ் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட வெங்கடேஷ் போலீசாருக்கு ஆதரவாக சூர்யா போல் வாக்குமூலம் அளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×