search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி பூங்கா"

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
    • ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் எச்.பி.எப் பூங்கா உள்ளது.

    ஊட்டி:

    இயற்கை அன்னையின் அற்புத ஆட்சியில் பசுமை போர்த்திய புல்வெளிகள், நீரோடைகள், அருவிகள், வனப்பு மிகுந்த வனப்பகுதிகள் என மக்கள் அனைவரையும் மயங்க வைக்கும் மலை மாவட்டம் என்றால் அது நீலகிரி மாவட்டம் தான்.

    இதன் காரணமாகவே நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து நீலகிரியை தேடி வருகின்றனர் சுற்றுலா பயணிகள்.

    இப்படி அத்தனை சிறப்புகளையும் ஒருங்கே பெற்றுள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

    இதனை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளும் ஊட்டி முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக ஊட்டி நகரின் சிறப்பை குறிக்கும் வகையிலும், வனப்பகுதி மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கிலும் ஊட்டி நகரின் பல இடங்களில் ஆங்காங்கே சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் எச்.பி.எப் பூங்கா உள்ளது. இந்த பூங்காவானது தற்போது ரூ.80 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் விரைவில் அது மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

    இந்த பூங்காவில் தோடர் பழங்குடியின மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் சிலைகள், தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம் பெற்ற யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் சிலைகள், கண்ணை கவரும் விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது. இது அங்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

    இதேபோல் ஊட்டி நகரின் நுழைவுவாயிலான வேலிவியூ பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.40 லட்சம் செலவில் தொலைநோக்கியுடன் கூடிய காட்சி கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஹில்பங்க் பகுதியில் உள்ள சாலையோர பூங்காவும் பொலிவுபடுத்தப்பட்டு காட்டெருமை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என தெரிகிறது.

    ×