search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணியாவிட்டால்"

    • ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.
    • நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தாக்கம் கடந்த 2 வாரமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் பொது இடங்களில் வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு மேலாக தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவ- மாணவிகள், மற்றும் என்.சி.சி.மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி ஈரோடு ஜி.எச்.ரவுண்டானாவில் தொடங்கியது. மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம், டவுன் டி.என். பி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணி மீனாட்சி சுந்தரனார் சாலை, பன்னீர்செல்வம் பார்க், கச்சேரி வீதி வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது

    இதைத்தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் நாள் என்பதால் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    நாளை முதல் பொது இடங்களில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×