search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "z plus"

    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பாரதீய ஜனதா தலைவர்கள் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பில் பணப்பெட்டிகளை கடத்துகிறார்கள் என்று மம்தா பானர்ஜி புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.

    மோடி மீதும், பா.ஜனதா மீதும் மம்தாபானர்ஜி தினமும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அந்த வரிசையில் நேற்று அவர் புதிய குற்றச்சாட்டு ஒற்றை வெளியிட்டார். பர்கானாஸ் மாவட்டம் அசோக் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களுக்கு பா.ஜனதாவினர் ஏராளமான பணத்தை அள்ளி கொடுக்கிறார்கள்.

    சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதிகோசின் காரில் இருந்து ஏராளமான பணத்தை கைப்பற்றி உள்ளனர். ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர் தங்களுக்கு வழங்கப்படும் இசட்பிளஸ், ஒய் பிளஸ் பாதுகாப்பு படையை பயன்படுத்தி பணப்பெட்டிகளை கடத்தி செல்கிறார்கள்.

    தங்களது வாகனத்திலேயே கட்டு கட்டாக பணத்தை அடுக்கி பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள். தேர்தல் சமயத்தில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர்களும் பிரசாரத்துக்கு வரும் போது அவர்களது ஹெலிகாப்டர்களையோ, கார்களையோ பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த கார்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை கடத்துவதே இதற்கு காரணம் ஆகும்.


    பிரதமர் மோடி வந்த விமானத்தில் இருந்து ஒரு பெட்டி எடுத்து செல்லப்படுவதை சில தினங்களுக்கு முன்பார்த்தோம். அதன் பிறகு படம் எடுக்க தடை செய்து விட்டார்கள். எனவே பா.ஜனதா தலைவர்களால் இதுபோல எத்தனை பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டதோ? யாருக்கு தெரியும்.

    பணத்தால் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம். எப்போது பணம் கொண்டு சென்றாலும் கண்டுபிடித்து விடுவோம்.

    இரவில் பணத்தை பட்டு வாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த பணத்தை எல்லாம் விழித்திருந்து பிடிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன். பிரசாரம் ஓய்ந்து விட்டதால் எளிதாக பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது.

    இவ்வாறு மம்தாபானர்ஜி கூறினார்.

    ×