search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Travel"

    டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பிறந்தநாள் விழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

    பிறந்தநாள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய அவருக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் பூங்கொத்து மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். விழாவில் பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்த பின்னர் விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- கட்சியில் பொறுப்புக்கு வருவீர்களா?

    பதில்:- கட்சியில் பொறுப்பு தேடி வரவில்லை. விஜயகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். அதில் என்னுடைய பங்கை நான் செய்கிறேன். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக நாங்கள் மீண்டும் அமெரிக்கா செல்கிறோம்.


    அதன்பிறகு அவர் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுவார். சிங்கத்துக்கு நிகரான தலைவராக மீண்டும் பார்ப்பீர்கள். தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்பார்.

    கே: ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் கூட்டணி சேர்வீர்களா?

    ப:- இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக் கூடாது. ஏனெனில் முதலில் அரசியலுக்கு வந்தது விஜயகாந்த் தான். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக பணியாற்றி உள்ளோம். எனவே தே.மு.தி.க.வை லேசாக எடை போட வேண்டாம்.

    கமலாவது கட்சி தொடங்கி இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர்களுடைய வாக்கு வங்கி என்ன என்பதை யாராவது கூற முடியுமா? எதுவுமே இல்லாதபோது கூட்டணி என்றால் ஒரு நாள் செய்தியுடன் முடிந்துவிடும்.

    எனவே அவர்கள் களத்திற்கு வரட்டும். நாங்கள் தேர்தல் களத்தில் எங்களை நிரூபித்துள்ளோம். ஆனால் இருவரும் தங்களை இன்னும் நிரூபிக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று நள்ளிரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கிறார். #DMDK #Vijayakanth
    சென்னை:

    தமிழக அரசியலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் செல்வாக்கு பெற்று முக்கிய இடத்தை பிடித்தார்.

    முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தார்.

    அ.தி.மு.க.-தி.மு.க. இரு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்து தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி பொறுப்புகளிலும் கட்சியினர் அங்கம் வகித்தனர். தமிழக அரசியல் கட்சிகளில் 3-வது இடத்திற்கு வளர்ந்து வந்த தே.மு.தி.க. கடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

    கடந்த சில வருடங்களாக விஜயகாந்தின் பேச்சுத் திறன் குறைந்து குரல் வளமும் பாதித்தது. மேலும் அவரது உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பொது இடங்களில் அவரால் நீண்ட நேரம் பேச முடியாத நிலை ஏற்பட்டது. பொதுக் கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகளை கூட அவர் தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்ற அடைய தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்தனர்.


    இதற்காக அவர் இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். பாரீஸ் சென்று அங்கிருந்து நியூயார்க் நகருக்கு செல்கின்றார். விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் செல்கிறார்கள்.

    அமெரிக்கா செல்லும் விஜயகாந்த் அங்கு 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது.

    அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அவற்றை குணமாக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து அதன் பிறகு சென்னை திரும்புவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஜயகாந்த் சுகம் பெற்று திரும்பி வர கட்சி தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா செல்வதற்காக அவர் குடும்பத்தினருடன் இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். தொண்டர்கள் யாரும் தன்னை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
    ×