search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin collector"

    தூத்துக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி அருகே மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் நர்சிங் மாணவிகள் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 42 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு முற்றிலும் குணமடைந்து வருகிறார்கள்.மேலும், சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் தொழுநோய் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்றிட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பரிதா ஷெரின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, மருத்துவ நலப்பணிகள் தொழுநோய் உதவி இயக்குனர் யமுனா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sterliteplant #tuticorincollectoroffice

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை வெளியிட்டது.

    தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனிடையே ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான பசுமை தீர்ப்பாய குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக ஆலையை சில நிபந்தனைகளுடன் இயக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் கூறியது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில அமைப்புகள் பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ஆலையை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

    இதனிடையே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஏராளமானோர் மனு கொடுக்க வந்திருந்தனர். இருதரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டி ருந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பாக வக்கீல் கிருஷ்ண மூர்த்தி, பிரபு, வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அப்போது அவர்கள் கூறும் போது, ‘தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை அறவழியில் போராடுவோம். தமிழக அரசு உடனடியாக சட்ட மன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்கள். தொடர்ந்து அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

    தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று கூறி முகத்தில் கவசம் அணிந்து வந்தார்கள்.

    பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு திரண்டு நின்ற பெண்கள் கூறுகையில், ‘பசுமை தீர்ப்பாய உத்தரவு பொதுமக்களுக்கு எதிராக அமைந்துள்ளது. அரசு வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. மக்களை பாதிக்கும் இந்த ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றனர்.

    போராட்டக்குழுவை சேர்ந்த வக்கீல் அரிராகவன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், பசுமை தீர்ப்பாயத்தை கண்டித்தும் வருகிற 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் உயர்நீதிமன்ற அனுமதியை பெற்று உண்ணாவிரதம் நடத்தப்படும்’ என்றனர். #Sterliteplant #tuticorincollectoroffice

    தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது:- 

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழாக்கள், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. விநாயகர் சிலைகளை வைப்பவர்கள் உதவி கலெக்டர்களின் அனுமதி பெற்று வைக்க வேண்டும். கடந்த ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டும் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும். அதுபோல கடந்த ஆண்டுகளில் விநாயகர் ஊர்வலம் சென்ற பாதைகளில் மட்டுமே இந்த ஆண்டும் செல்ல அனுமதிக்க வேண்டும். 

    காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும், இயற்கை சாயம் கொண்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். செயற்கை வர்ணம் பூசிய பிளாஸ்டர் ஆப்பாரிஸ் மூலம் செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு அனுமதியளிக்க கூடாது. மேலும் அதுபோன்ற விதிமுறைகள் மீறி சிலைகள் நிறுவப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    திரேஸ்புரம், முத்தையாபுரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் வேம்பார் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. இதை தவிர்த்து புதிதாக எந்த இடத்திலும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. 

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×