search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "triple talaq law"

    எதிர்க்கட்சிகளின் தடைகளையும் மீறி முத்தலாக் சட்டம் கொண்டுவருவதில் அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #NarendraModi #TripleTalaq
    காந்திநகர்:

    பாரதீய ஜனதா மகளிர் அணியினரின் 5-வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 60, 70 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, இப்போது நாட்டு மக்கள் பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முந்தைய அரசுகள் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் உள்பட எதுவும் செய்யவில்லை. அவர்கள் வாக்குறுதி மட்டுமே கொடுத்தனர்.

    60, 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க தவறிவிட்டனர். சமூக சீர்திருத்தம் மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஆகியவற்றுக்காக முந்தைய அரசுகள் உரிய நேரத்துக்காக காத்துக்கொண்டு இருந்தன.



    ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் சமூகத்தின் பார்வை பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக்கு நல்ல மாற்றத்தை நோக்கி செல்கிறது. முதல்முறையாக அரசின் முக்கிய திட்டங்கள் பெண்களை சார்ந்தே உள்ளது. உதாரணமாக தூய்மை இந்தியா திட்டம், இலவச எரிவாயு திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் போன்றவை பெரும்பாலும் பெண்களுக்கானதாகவே உள்ளது.

    பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தில் 75 சதவீத வீட்டு உரிமையாளர்கள் பெண்கள் தான். 18 கோடி வங்கி கணக்குகள் பெண்களுக்குரியது. ஆண்-பெண் பாலின விகிதாச்சாரமும் அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் துறை மந்திரிகள் குழுவில் முதல்முறையாக 2 பெண்கள் இணைந்துள்ளனர்.

    விமானப்படையில் போர் விமான பைலட்டுகளாக பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடற்படையிலும் பெண் அதிகாரிகள் பிரிவு உள்ளது. கடத்தல் தடுப்பு சட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது.

    கடும் எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தடைகள் இருந்தபோதிலும், அரசு முத்தலாக் சட்டத்தை கொண்டுவருவதில் உறுதியாக உள்ளது. இதன்மூலம் முஸ்லிம் பெண்கள் மிகப்பெரிய வாழ்க்கை அச்சுறுத்தலில் இருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்ல, முஸ்லிம் பெண்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்கு அவர்களுடன் ஆண்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற பிரிவை நீக்கியுள்ளோம்.

    முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல் சுதந்திரத்துக்கு முன்பே ஆமதாபாத் நகரசபை தலைவராக பெண்ணை நியமித்து அதிகாரமளித்தார். அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை நாட்டு மக்கள் பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #NarendraModi #TripleTalaq 
    ×