search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Border"

    ஆந்திராவில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ‘ஜீரோ’ பாயிண்டுக்கு இன்று இரவு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Krishnawater
    சென்னை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன.

    4 ஏரிகளில் மொத்தம் 949 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. (மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம்).

    இந்த தண்ணீரை வைத்து இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும். இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதேபோல் தண்ணீர் இன்றி கருகி வரும் நெல் பயிர்களை காப்பாற்ற கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திர விவசாயிகளும் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு பின்னர் 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணா தண்ணீர் ஆந்திர மாநிலம் சத்யவேடு அருகே வந்து கொண்டு இருக்கிறது. அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ‘ஜீரோ’ பாயிண்டுக்கு இன்று இரவு கிருஷ்ணா நீர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பூண்டி ஏரியை தண்ணீர் நாளை காலை சென்றடையும். தொடர்ந்து கிருஷ்ணா கால்வாயில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது வெறும் 166 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் ஏரியில் 1,540 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. #Krishnawater


    கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயிண்ட்’ வந்தடைந்தது. #Krishnawater
    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜனவரி 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 26-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட காலத்தில் 2. 253 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    இந்த நிலையில் நீர்வரத்து இல்லாததாலும், கோடை வெயில் காரணத்தாலும் பூண்டி ஏரியில் தண்ணீர் முற்றிலும் வறண்டு விட்டது.

    இதன் காரணமாக மே மாத இறுதியில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இரண்டாவது தவணையாக ஜூலை மாதத்தில் கண்ட லேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

    ஆனால் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே இம்மாத முதல் வாரத்தில் ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணைக்கு தண்ணீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை முழுவதுமாக நிரம்பிதால் உபரி நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட்டனர்.

    இந்த நீர் சோமசிலா அணை வழியாக கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதினர். அதன்படி கடந்த 22-ந் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 300 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 350 கனஅடியாக உயர்த்தினர்.

    இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயிண்ட்’ வந்தடைந்தது.

    வினாடிக்கு 75 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் மரிய ஹென்ரி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர்கள் சுப்புராஜ், அரசு, அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் பிரதீஷ், பழனிகுமார், சதீஷ், பழனிகுமார், சண்முகம் ஆகியோர் மலர் தூவி கிருஷ்ணா நதி நீரை வரவேற்றனர்.

    இந்த நீர் 25 கிலோ மிட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று இரவு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி 13 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணை தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. #Krishnawater

    கேரளாவில் எலி காய்ச்சலுக்கு 29 பேர் பலியாகி இருப்பதால் தமிழக எல்லையில் முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்புடன் யாராவது வருகிறார்களா? என சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து அங்கு எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எலி காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே எலி காய்ச்சல் பாதிப்புடன் கோவைக்கு வரும் நபர்களை கண்டறியவும், காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சந்தோஷ்குமார் கூறியதாவது:-

    எலி காய்ச்சல் எலிகளின் சிறுநீர் மூலமாக லெப்டோ பைரோசியஸ் என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. எலி காய்ச்சலை சாதாரண காய்ச்சல் என கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

    இந்த காய்ச்சல் 7 நாள் முதல் 10 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் பாதிப்பு உடையவர்களுக்கு கை, கால் வலி, தலைவலியுடன் கண் சிவப்பாக மாறிவிடும். மேலும் அடிக்கடி வயிற்று வலியுடன் வாந்தியும் ஏற்படும். கவனிக்காமல் விட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

    எனவே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். சுகாதார துறை சார்பில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் முகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்புடன் கேரளாவில் இருந்து யாராவது வருகிறார்களா? என கண்காணித்து வருகிறோம். இது வரை கோவை மாவட்டத்தில் யாருக்கும் எலி காய்ச்சல் பாதிப்பு இல்லை.

    எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மேற்கண்ட அறிகுறிகளுடன் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×