search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டியிடம் நகை"

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்தில் காரில் வந்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை, பணம் பறித்தனர்.
    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த களங்காணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தாயி (வயது 77).

    இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 35 வயது மதிக்கத்தக்க பெண், கந்தாயியிடம் முகவரி கேட்டு பேச்சு கொடுத்தார். 

    அப்போது அந்த பெண், நான் ஏற்கனவே உங்களை பார்த்த போது, நீங்கள் நகை அணிந்திருந்தீர்கள், அதைப் போலவே நானும் செய்ய வேண்டும். எனவே அந்த நகையை காண்பியுங்கள் என கேட்டுள்ளார்.
     
    இதையடுத்து கந்தாயி, வீட்டிற்குள் அந்த பெண்ணை அழைத்து சென்று, அலமாரியில் வைத்திருந்த நகையை எடுத்து, அந்த பெண்ணிடம் காண்பித்தார்.

    பின்னர் இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் தண்ணீர் கேட்டதால், வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த கந்தாயி, அந்த பெண் அங்கு இல்லாததால் திடுக்கிட்டார். 

    பின்னர், வீட்டிற்குள் சென்று அலமாரியில் பார்த்த போது, அங்கு வைத்திருந்த 4½ பவுன் செயின் மற்றும்  35 ஆயிரம் பணத்தை அந்த பெண் திருடிச்சென்றது தெரிந்தது.

    இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மற்றும் நகையை திருடிச்சென்ற பெண் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×