என் மலர்
நீங்கள் தேடியது "நெல் கொள்முதல் விலை"
- டீசல் மற்றும் கூலி உயர்வு அதிகரித்துள்ளதால் லாபம் இல்லை.
- ஐந்து சதவீதம் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
திருப்பூர்:
நெல் விவசாயிகள் நலன் கருதி கடந்த ஆண்டு மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு, 72 ரூபாய் உயர்த்தியது. இந்தாண்டு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.இதனால் நடப்பாண்டு கொள்முதல் விலையை 100 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மாநில அரசின் ஊக்கத்தொகை 75 ரூபாயுடன் சேர்த்து சன்ன ரக நெல்லுக்கு 2,160 ரூபாயும் மோட்டாரக நெல்லுக்கு 2,115 ரூபாயும் கிடைக்கிறது.
இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது :-
மத்திய அரசு 2014 தேர்தல் அறிக்கையில் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி உற்பத்தி செலவுடன்50 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். டீசல் மற்றும் கூலி உயர்வு அதிகரித்துள்ளதால் லாபம் இல்லை. குவின்டாலுக்கு100 ரூபாய் உயர்வால் பலன் இல்லை. இது மகிழ்ச்சி அளிக்கவில்லை.
பி.ஏ.பி., பாசன சபை தலைவர் கோபால் கூறுகையில், கொள்முதல் விலை உயர்வு போதாது. நடவு, உழவு, பூச்சி மருந்து, களை எடுப்பு, விதை என அனைத்தும் உயர்ந்துள்ளது. இது பயன் தரக்கூடியதாக இல்லை. ஒரு குவின்டாலுக்கு 3,000 ரூபாய் கொடுத்தால்தான் கட்டுப்படியாகும்.
உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றியசெயலாளர் நடராஜ் கூறுகையில்,
இந்த விலை போதாது. ஐந்து சதவீதம் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், உற்பத்தி செலவு தாறுமாறாக உயர்ந்துள்ளது. விவசாயம் அழிவை நோக்கிச் செல்கிறது. அதை காப்பாற்ற வேண்டுமானால் 1,000 ரூபாய் உயர்த்தித் தரவேண்டும். ஒரு குவின்டால் நெல் 3,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.
- கடந்த ஆண்டின் கொள்முதல் விலையைவிட மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே உயர்த்தியுள்ளது.
- நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
சென்னை:
டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2022-2023-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கவிருக்கும் நிலையில், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.75-ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ.100-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
நெல்லுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாட்டு விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
கடந்த ஆண்டின் கொள்முதல் விலையைவிட மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே உயர்த்தியுள்ளது. மத்திய அரசு கொள்முதல் விலையை திருப்தியளிக்கும் அளவுக்கு உயர்த்தாத நிலையில், மாநில அரசுதான் ஊக்கத்தொகையை உயர்த்தி விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஓரளவாவது ஈடுசெய்ய வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு அறிவித்த போதே, தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பா.ம.க. கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழக அரசு அந்த கோரிக்கையை பரிசீலிக்கக்கூட இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதுதான். கடந்த 2020-ம் ஆண்டு வரை இதே கோரிக்கையை இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் எழுப்பிக் கொண்டிருந்தார்.
அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் இப்போது அவரது கைகளுக்கே வந்துவிட்ட நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இதைவிட சிறந்த தருணம் வாய்க்காது.
எனவே, இனிமேலும் தாமதிக்காமல் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக ரூ.3 ஆயிரம் கிடைக்கும் வகையில், நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






