என் மலர்
நீங்கள் தேடியது "Superstitions Thirunakshatra"
- வைணவ ஆசாரியர்களில் ஒருவர் பெரிய நம்பிகள்.
- திருவடிகள் மகள் அத்துழாய் மடியிலுமாக இருக்கிறார்.
மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த வைணவ ஆசாரியர்களில் ஒருவர் பெரிய நம்பிகள். ராமானுஜருக்கு மதுராந்தகத்தில் பஞ்சம்ஸ்காரம் செய்த குரு. பெரிய நம்பிகள் (மஹாபூர்ணர்) வாழ்க்கையில் தனது மதக்கருத்தை பரப்புவதைவிட அப்பட்டமாக வாழ்க்கையில் பின்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டார்.
சோழ அரசன் – அல்லது அவர் ஆளுகைக்கு உட்பட்ட ஏதோ ஒரு சிற்றரசனால் கண்கள் பறிக்கப்பட்ட பெரிய நம்பிகள் வயோதிகத்தாலும் – வேதனையாலும் உடல் தளர்ந்து கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து – திருவரங்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்.
தனக்கு மரணம் நெருங்குவதை உணர்கிறார். கும்பகோணம் – அய்யம்பேட்டை தாண்டி – பசுபதி கோயில் என்று சொல்லப்படும் ஊருக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய நம்பிகளால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. மகள் அத்துழாய் மீது தளர்ந்து போய் அப்படியே சாய்ந்து விடுகிறார். தலை கூரத்தாழ்வான் மடியிலும், திருவடிகள் மகள் அத்துழாய் மடியிலுமாக இருக்கிறார். அத்துழாய் பேசுகிறாள்.
"அப்பா…. கொஞ்சம் சமாளித்துக் கொள்ளுங்கள்… ஓரிரண்டு நாட்கள்… கொஞ்சம் முயன்றால் திருவரங்கம் போய்விடலாம்….'' மகள் சொன்னதைக் கேட்டு அந்தச் சூழ்நிலையிலும் அவர் இதழ்க்கடையில் புன்னகை விரிகிறது.
"திருவரங்கத்தில் சென்று உயிரை விட்டால் மோட்சம் என்கிறாய்…. இல்லையா"
"அப்படித்தானே சாத்திரங்கள் சொல்கின்றன..''
"அம்மா…. சாத்திரங்கள் அப்படித்தான் சொல்கின்றன. நீ சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகளுக்கு மேலே சில பேருண்மைகள் உண்டு..
"அப்படியா..".
"ஆம்… அம்மா… அரங்கன் அந்தப் பேற்றினை இந்த எளியவனுக்குக் கொடுத்திருக்கிறான். அரங்கம்தான் சிறந்தது…. அங்கே வாழ்ந்தால்தான் மோட்சம்… என்பதை அப்படியே வரிக்கு வரி எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் அரங்கத்தில் குடியேறுவது சாத்தியமா…? அப்படி வார்த்தைகளை பிடித்துக் கொண்டு – உள் அர்த்தத்தை கவனிக்காது போனால் – அரங்கம்தான் தாங்குமா….?
அப்படி திருவரங்கத்தில் வாழாதவர்களுக்கும் திருவரங்கத்தில் சாகாதவர்களுக்கும் மோட்சம் கிடையாதா? எல்லோரும் திருவரங்கத்திற்கு போவது இருக்கட்டும்…எல்லா ஊரும் திருவரங்கமாக வேண்டாமா..
"அப்பா…. நீங்கள் சொல்வது புரிகிறது…. ஆனால் திருவரங்கம்?" பெரிய நம்பிகள் இப்போது ஓர் அற்புதமான வாக்கியத்தைச் சொல்கிறார்.
"அம்மா…. இப்போது இந்த தளர்ந்த வயோதிக நிலையில் – அந்திம நேரத்தை – எண்ணிக் கொண்டிருக்கும் – அடியேன் – தலை சாய்த்திருக்கிறேனே – கூரத்தாழ்வான் என்கிற பரமபாகவதன் மடியில்… இந்த பாகவதன் மடியைவிட உயர்ந்ததா திருவரங்கம்?" அத்துழாய் பேசவில்லை. அந்த பெரிய நம்பிகளின் அவதார நட்சத்திர தினம் இன்று.






