search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students request"

    • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி காலை மற்றும் மாலை வேளைகளில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை ஏற்றாமல் செல்லும் சூழ்நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அண்டை கிராமங்களான கண்டபட்டி, இலந்தைகுளம், உடையாம்புளி, காத்தபுரம், நாலங்குறிச்சி, ஓடைமறிச்சான், புதுப்பட்டி, காசிநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி படிப்பை முடித்து நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மேல்படிப்புக்காக சேர்கின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிக்கு சென்றுவர வசதியாக காலை 8 மணி அளவில் காசிநாதபுரத்தில் இருந்து மருதம்புத்தூர், உடையாம்புளி, மாறாந்தை வழியாக சீதபற்பநல்லூர், பேட்டை, டவுன் பொருட்காட்சிதிடல் வரையிலும் அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த பஸ் மதியம் 1 மணி, மாலை 6.30 மணி, இரவு 9 மணி என மொத்தம் 4 வேளைகளில் டவுனில் இருந்து காசிநாதபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலமாக கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது வேலைக்காக கிராமப்புறங்களில் இருந்து வரும் நடுத்தர குடும்பத்தினர் அதிகமாக பயன்பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி காலை மற்றும் மாலை வேளைகளில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை ஏற்றாமல் செல்லும் அவலம் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். சில நேரங்களில் இடைப்பட்ட பகுதிகளில் இறக்கி விட்டு செல்வதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பஸ்சில் கூட்டத்தை சமாளிக்க உடையாம்புளி வரை இயக்கப்படும் பஸ்சை மருதம்புத்தூருக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளருமான சங்கீதா சுதாகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், நெல்லையில் இருந்து ராணி அண்ணா கல்லூரி வழியாக மனுஜோதி ஆசிரமம் சென்று உடையாம்புளி வரை இயக்கப்படும் அரசு பஸ்சை மருதம்புத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • மண்டல விளையாட்டுப் போட்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே அந்தந்த தாலுகாக்களில் நடத்தி வருகின்றனர்.
    • கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து போட்டிகளில் பங்குபெறும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    மண்டல விளையாட்டுப் போட்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே அந்தந்த தாலுகாக்களில் நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் 28 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே நடத்தப்படுகிறது.

    மாவட்ட உடற்கல்வித்துறை சார்பில் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் மாணவ மாணவிகள் தாலுகா தலைநகர பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு டிஜோன் விளையாட்டுப் போட்டிகள் அந்தந்த கல்வி மாவட்டங்களில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கொடைக்கானல், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தை சேர்ந்ததாகும். இதனால் இந்த ஆண்டு நடைபெறும் மண்டல விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட உடற்கல்வித்துறை வத்தலகுண்டு பகுதியில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து போட்டிகளில் பங்குபெறும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பணம் செலவு செய்து பயணித்து வத்தலகுண்டு பகுதிக்கு சென்று அங்கு நடைபெற உள்ள மண்டல விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வத்தலகுண்டு பகுதியில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள குறிப்பாக மேல் மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், பூம்பாறை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே நடத்த வேண்டும் என்று மலை கிராம பள்ளி மாணவ-மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் உடற்கல்வி துறையும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி மாவட்ட உடற்கல்வி துறையினரை தொடர்பு கொண்ட போது அவர்கள் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×