search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Sri Ravi Shankar"

    • கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.
    • கொரோனா தடுப்பு மருந்தாக மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

    மும்பை :

    மராட்டிய மாநிலம் அகோலாவில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு ஒன்றில் வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியதாவது:-

    கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் 2 ஆண்டுகள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். அந்த நேரத்திலேயே, கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என்று நான் கூறினேன். சில நாடுகள் மற்றும் சில மனிதர்கள் செய்த சதி தான் என்றும் கூறினேன். இது கிருமியை பரப்பி செய்யப்பட்ட போர். ஆனால் இதனை வெளியில் கூற வேண்டாம், சர்ச்சையை ஏற்படுத்தி விடும் என்று என்னுடைய சீடர்கள் என்னை அறிவுறுத்தினர்.

    கொரோனா தடுப்பூசி மருந்து எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை என்று பெரிய நாடுகள் கூட தற்போது கூறுகின்றன. இது தொடர்பாக நான் முன்பு கூறியது இப்போது நிரூபணம் ஆகி உள்ளது.

    கொரோனா தடுப்பு மருந்தாக மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நிச்சயம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர்.
    • வானிலை சீரடைந்ததும் 11 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

    சத்தியமங்கலம்:

    வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டார். ஹெலிகாப்டரில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், அவரது உதவியாளர்கள், பைலட்டுகள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர்.

    ஹெலிகாப்டர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் காலை 10.40 மணியளவில் வானில் சென்றது. அப்போது அந்த பகுதியில் கடுமையான மேக மூட்டம் காரணமாக வானிலை மோசமாக இருந்தது.

    இதையடுத்து பைலட் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்க முயன்றார். பின்னர் ஒரு வழியாக கடம்பூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ள உக்கினியம் என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து பார்த்தனர். அப்போது தான் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் வானிலை சீரடைந்ததும் 11 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.

    இதே போல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஹெலிகாப்டரும் மோசமான வானிலை காரணமாக கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர் என்ற பகுதியில் வயல்வெளியில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என வாழும் கலை அமைப்பு நிறுவனர் ரவிசங்கர் கூறினார். #SriSriRaviShankar #RamTemple
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக மீண்டும் வலுத்து வருகிறது. அங்கு சர்ச்சைக்குரிய பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

    இந்த விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மடாதிபதிகள் டெல்லி டல்கட்டோரா மைதானத்தில் 2 நாள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் 2-ம் நாளான நேற்று பங்கேற்று உரையாற்றிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு தலையிடக்கூடாது என தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அயோத்தி விவகாரத்தில் 3 பிரிவினரும் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான ஒரு முடிவை எட்ட வேண்டும். இதில் சுப்ரீம் கோர்ட்டின் தலையீடு இரண்டாம்பட்சமாகவே இருக்கவேண்டும். இதில் கடைசி வாய்ப்பாகவே நாட்டின் சட்டத்துறை (அவசர சட்டம்) தலையிட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    நாடு முழுவதிலும் இருந்து சாதுக்கள், மடாதிபதிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், நியாஸ் பரிஷத் தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி, ராமபத்ர ஆச்சார்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரவிசங்கர், ராமர் கோவில் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், சிரியாவை போல இந்தியாவிலும் உள்நாட்டுப்போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். நல்லெண்ண நடவடிக்கையாக அந்த இடத்தை முஸ்லிம்கள் விட்டுத்தர வேண்டும் என வலியுறுத்திய அவர், ராம பிரானின் பிறப்பிடத்தை நாம் மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டார்.

    ரவிசங்கரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு அதிருப்தி வெளியிட்டனர். எனவே தனது கருத்துக்கு விளக்கம் அளித்த ரவிசங்கர், சுப்ரீம் கோர்ட்டு தலையிடுவதால் நாட்டில் ரத்தம் சிந்தப்படும் என தான் கூறவில்லை என தெரிவித்தார்.

    இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அருகே மசூதி கட்டுவதை இந்துக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என மத்திய மந்திரி உமா பாரதி கூறியுள்ளார். இந்துக்கள்தான் உலகிலேயே மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் எனக்கூறிய அவர், ஆனால் ராமரின் பிறப்பிடமான அயோத்தியாவில் மசூதி கட்டுவதன் மூலம் இந்துக்களை சகிப்புத்தன்மையற்றவர்களாக மாற்ற வேண்டாம் என அனைத்து அரசியல் கட்சிகளை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

    இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைத்து கட்சிகளின் உதவியை கேட்பதாக கூறிய உமாபாரதி, அங்கு தன்னுடன் இணைந்து ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுவதற்கு ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுத்தார்.

    இந்த நிலையில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக சமீப காலமாக அரங்கேறும் நிகழ்வுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தவே இந்த பிரச்சினைகள் அரங்கேறுவதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் மவுலானா வாலி ரஹ்மானி கூறினார்.

    ராமர் கோவிலுக்காக சங் பரிவார் அமைப்புகள் போராட்டம் நடத்த தயங்காது என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி கூறியதை சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும் எனவும், மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார். 
    ×