என் மலர்
நீங்கள் தேடியது "அ.தி.மு.க."
- அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.
- ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
* அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடையின்றி கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
* நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை கொடிகளை பொதுமக்கள் ஒன்று கூடி மிகுந்த சிரமங்களுக்கு இடையே அகற்றினர். ஆனால், ஆளுங்கட்சியின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், இந்த ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.
* அஸ்தினாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற் கொள்ளாத காரணத்தால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்களும், பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
* குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், உயிர் நீத்தோருக்கான இறுதிச் சடங்குகளை மக்கள் மிகவும் அச்சத்துடன் செய்து வருகின்றனர்.
* அஸ்தினாபுரம் பகுதியில் நாள்தோறும் 5 எண்ணிக்கையில் மினி பஸ்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
* இப்பகுதி முழுவதும் முறையாக குப்பைகள் அள்ளப்படாத காரணத்தால், அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. இதனால், பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதிக் கழகத்தின் சார்பில் வருகிற 11-ந் (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணியளவில், ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபட வேட்டம்மன் கோவில் சந்திப்பு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயககுமார் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






