என் மலர்
நீங்கள் தேடியது "எந்திர வடிவில் சனிபகவான்"
- சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.
- எந்திரங்களுடன் இருப்பதால் எந்திர சனீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். திருவண்ணாமலை அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் எந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோவில் எழுப்ப விரும்பினார்.
சனிபகவான், ஈஸ்வர பட்டம் பெற்றவர் என்பதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோவில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோவில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோவில் எழுப்பினர்.
எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு எந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது.
லிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள `ஷட்கோண எந்திரம்' உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீஜாட்ஷர மந்திரம், லட்சுமி கடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.






