என் மலர்
நீங்கள் தேடியது "அகத்தீஸ்வரர் கோவில்"
- பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி.
- திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையின் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்வதற்கு சித்தர்கள் மூலமாக சிவபெருமான் பல வழிகளைக் காட்டியுள்ளார். அவற்றில் ஒன்றுதான், இந்த பெருகமணி அகத்தீஸ் வரர் கோவில் வழிபாடு.
இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவிலேயே திரு மணம் நடைபெறும் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் கருவறையில், 'அகத்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக் கிறார். இத்தல இறைவியின் திருநாமம், 'ஆனந்தவல்லி' என்பதாகும். ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது.
பல கோடி யுகங்களுக்கு முன்பாக சிவபெருமான், தமிழ் மொழியை முருகப்பெருமானுக்கு கற்றுத்தந்தார். முருகப்பெருமான், தமிழின் சுவையை சித்தர்களின் தலைவராக கருதப்படும் அகத்தியருக்கு போதித்தார். அத்தகைய சிறப்புமிக்க அகத்தியருக்குரிய 'ஓம் அகத்தீசாய நமக' என்ற குரு மந்திரத்தை நாம் ஜெபித்தால், அனைத்து விதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.
இந்த பூமியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களிலும் அகத்தியர் வழிபாடும், பூஜையும் செய்திருக்கிறார். தவிர, அகத்தியரால் உருவான ஆலயங்களும் ஏராளமாக இருக்கின்றன. அகத்தியரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் மூலவராக அமைந்த ஆலயங்களுக்கு 'அகத்தீஸ்வரர் கோவில்' என்றே பெயர் அமைந்திருக்கும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவராகப் போற்றப்படுவது போல, பெண் சித்தர்களின் தலைவியாக அகத்தியரின் மனைவி லோபமுத்ரா போற்றப்படுகிறார். அகத்தியருக்கும், லோபமுத்ராவிற்கும் திருமணம் நடந்த இடமாகவே திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் திகழ்கிறது.

அகத்தியர் - லோபமுத்ரா
ஒரு தலைசிறந்த சிவபக்தனை மணம் முடிக்க வேண்டும் என்று லோபமுத்ரா சபதம் எடுத்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்காக, அகத்தியர் பல்வேறு விதமான உபதேசங்களை, லோபமுத்ராவுக்கு வழங்கினார். அதன் முடிவாக, தான் எதிர்பார்த்த தலைசிறந்த சிவனடியார் அகத்தியர் என்பதை லோபமுத்ரா உணர்ந்துகொண்டார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இங்கு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
30 வயதைக் கடந்தும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கே வருகை தருவது மேலும் சிறப்பான அருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அப்படி வரும் போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம் (90 நிமிடங்கள்) பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் தல விருட்சமான வில்வ மரத்தை, அகத்தியருக்கு பிடித்த 8 எண் இலக்கத்தை குறிக்கும் வகையில் எட்டின் மடங்குகளில் வலம் வர வேண்டும். அப்போது 'அகத்தீசாய நமக' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கான பலனை திருமணமாகாதவர்கள், விரைவில் அடைவார்கள்.
- ஆண்டு விழாவையொட்டி 6 கால பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தாராபுரம் :
தாராபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 100ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு விழாவையொட்டி 6 கால பூஜைகள் விடிய விடிய நடைபெற்றது.
அகத்தீஸ்வரர் ரிஷப வாகனத்தில் சாமி உலா வந்த போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து ஈஸ்வரனை தரிசனம் செய்தனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஈஸ்வரனை வழிபட்டனர்.
விழாவினை முன்னிட்டு காலை முதல் விடிய விடிய அன்னதானம் நடைபெற்றது. அதனை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கிவைத்தார். இரவு கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்–றது. தாராபுரம் துணை போலீஸ் சூூப்பிரண்டு தனராசு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கோவில் குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன.
- கழிவு நீர் கோவில் குளத்தில் கலக்கவும் வாய்ப்பு உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னரால் கட்டப்பட்டது.
இதன் கருவறையில் சுயம்பு வடிவாக தோன்றிய சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மேலும் கோவில் முன்பு உள்ள ஆனந்த புஷ்கரணி என்னும் திருக்குளத்தில் சிவபெருமான் எழுந்தருளி பார்வதி தேவியின் சாபத்தை நீக்கி அகத்திய மாமுனிவருக்கு காட்சியளித்ததாக புராணங்கள் கூறுகிறது.
பார்வதி தேவி நீராடிய இந்த ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் இதுவரை தண்ணீர் வற்றியதில்லை என்பது மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த கோவில் குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. கடந்த ஆண்டு சிவனடியார்கள் சிலர் தாமாக முன்வந்து தங்கள் சொந்த பணத்தில் குளத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பினர்.
இந்த நிலையில் பொன்னேரி நகராட்சி அதிகாரிகள் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தை சுற்றிலும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக அதன் அருகிலேயே ஜே.சி.பி.எந்திரம் மூலம் நீளமாக பள்ளம் தோண்டி உள்ளனர்.
கோவில் குளம் அருகே கழிவு நீர்கால்வாய் அமைக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பள்ளம் தோண்டியபோது எந்திரத்தின் அதிர்வின் காரணமாக குளத்தைச் சுற்றி சில இடங்களில் கட்டமைக்கப்பட்ட கருங்கற்கள் விலகி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கோவில் குளத்தை சுற்றி கழிவுநீர் கால்வாய் அமைத்தால் அதன் புனிதம் கெட்டுவிடும். இந்த நீர்நிலைப் பகுதிகளில் எந்த ஒரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது. கழிவு நீர் கோவில் குளத்தில் கலக்கவும் வாய்ப்பு உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோவில் முன்பாக கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், குளத்தைச் சுற்றி தோண்டிய பள்ளத்தை மூடாமலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். வழிபாட்டு தலத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.






