என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீபெரும்புதூர் கொலை"

    மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டி கொலை செய்து விட்டு மகன் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது45).இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளி அருகே சலூன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேணுகா.

    இவர்களது மகன் தினேஷ்(20). இவர் வேலைக்கு போகாமல் குடி போதைக்கு அடிமையாக ஊர் சுற்றி வந்தார்.

    நேற்று இரவு தினேஷ் மது குடிக்க பணம் கேட்டு தந்தை ராமுவிடம் தகராறில் ஈடுபட்டார். மகனை கண்டித்து விட்டு ராமு வீட்டு மாடிக்கு சென்று தூங்கினார். இரவு மின்தடை ஏற்பட்டதால் ராமுவின் மனைவி ரேணுகாவும் மாடிக்கு வந்து தூங்கினார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மின்சாரம் வந்துவிட்டதாக கூறி தாய் ரேணுகாவை மாடியில் இருந்து கீழே வருமாறு தினேஷ் அழைத்தார்.

    இதையடுத்து ரேணுகா வீட்டுக்குள் சென்று தூங்கினார். ஏற்கனவே மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் இருந்த தினேஷ் தூங்கி கொண்டிருந்த தந்தை ராமுவின் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டான்.

    அலறல் சத்தம் கேட்டு ரேணுகா வந்து பார்த்த போது கணவர் ராமு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தினேஷை தேடி வருகிறார்.

    கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற தினேஷ் மாயமாகி இருந்தார். கடந்த ஆண்டு மேல்மருவத்தூர் அருகே அவனைப் பார்த்து குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

    தினேசுக்கு குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் கடந்த மாதம் அவனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேசை கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் மதுகுடிக்க பணம் தராததால் அவர் தந்தை ராமுவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூரில் கணவரை கொன்றதால் கூலிப்படை மூலம் ரவுடியை கொலை செய்த சென்னை பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள படப்பை விவேகானந்த நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). பிரபல ரவுடி.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை படப்பையை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு பாஸ்கர் சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் பாஸ்கரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக 5 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

    இந்த நிலையில் ரவுடி பாஸ்கர் கொலையில் தொடர்புடைய சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த புவனாவை போலீசார் கைது செய்தனர். கணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக அவர் கூலிப்படையை ஏவி பாஸ்கரை தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்தது.

    கைதான புவனாவின் கணவர் கந்தன். கேபிள் ஆபரேட்டரான அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற போது மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலையில் ரவுடி பாஸ்கருக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பழிக்கு பழிவாங்கும் விதமாக புவனா கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்டி இருப்பது தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கொலையுண்ட பாஸ்கர் சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி ‘பங்க்’ குமாரின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

    கடந்த 2006-ம் ஆண்டு ‘பங்க்’ குமாரை போலீசார் சுட்டு கொன்றனர். இதனையடுத்து அவரது கூட்டாளிகள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

    படப்பையில் தஞ்சம் அடைந்த பாஸ்கர் அங்கு ரவுடியாக சுற்றி வந்துள்ளார். அப்போது அவர் ஏற்கனவே செய்த கொலைக்கு பழிக்குப் பழியாக தீர்த்துக்கட்டப்பட்டு விட்டார்.
    ×