search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொலை
    X
    கொலை

    ஸ்ரீபெரும்புதூரில் மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

    மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டி கொலை செய்து விட்டு மகன் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது45).இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளி அருகே சலூன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரேணுகா.

    இவர்களது மகன் தினேஷ்(20). இவர் வேலைக்கு போகாமல் குடி போதைக்கு அடிமையாக ஊர் சுற்றி வந்தார்.

    நேற்று இரவு தினேஷ் மது குடிக்க பணம் கேட்டு தந்தை ராமுவிடம் தகராறில் ஈடுபட்டார். மகனை கண்டித்து விட்டு ராமு வீட்டு மாடிக்கு சென்று தூங்கினார். இரவு மின்தடை ஏற்பட்டதால் ராமுவின் மனைவி ரேணுகாவும் மாடிக்கு வந்து தூங்கினார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மின்சாரம் வந்துவிட்டதாக கூறி தாய் ரேணுகாவை மாடியில் இருந்து கீழே வருமாறு தினேஷ் அழைத்தார்.

    இதையடுத்து ரேணுகா வீட்டுக்குள் சென்று தூங்கினார். ஏற்கனவே மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் இருந்த தினேஷ் தூங்கி கொண்டிருந்த தந்தை ராமுவின் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டான்.

    அலறல் சத்தம் கேட்டு ரேணுகா வந்து பார்த்த போது கணவர் ராமு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தினேஷை தேடி வருகிறார்.

    கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற தினேஷ் மாயமாகி இருந்தார். கடந்த ஆண்டு மேல்மருவத்தூர் அருகே அவனைப் பார்த்து குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

    தினேசுக்கு குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் கடந்த மாதம் அவனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேசை கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் மதுகுடிக்க பணம் தராததால் அவர் தந்தை ராமுவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×