என் மலர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து"
மதுரை:
மதுரையை அடுத்த டி.பெருங்குடியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 38). இவர் வண்டியூர் ராணி மங்கம்மாள் சாலையில் பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். நேற்று இரவு குடோனை மூடிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தல்லாகுளம், பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே அண்ணாநகர் போலீசில் ஸ்டாலின் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தில் சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். வண்டியூர் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் முகமது ஷாஜூ (வயது 42). இவர் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். இவரது குடோனை ஒட்டி தெற்கு உக்கடத்தை சேர்ந்த முகமது இப்ராகிம்(37) என்பவருக்கு சொந்தமான ஷோபா கடை உள்ளது.
நள்ளிரவு 2 மணி அளவில் பிளாஸ்டிக் கடையில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகே உள்ள ஷோபா கடைக்கும் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் குனியமுத்தூர் போலீசாருக்கும், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். கூடுதலாக 2 வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்தது.
சுமார் 4 மணி நேரம் வீரர்கள் போராடி காலை 6 மணிக்கு தீயை முற்றிலுமாக அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட் கள் எரிந்து நாசமானது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






