என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shriman Nahegopala Nayaki Swami's Jayanti"

    • பஞ்சசம்ஸ்காரம் எனும் தீட்ஷையைப் பெற்றார்.
    • மகா விஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார்.

    "எங்கே போனானோ கண்ணன்

    என்ன செய்வோம் தோழி [எங்கே]

    உங்களை விட்டெங்கும் போகிலேன் நானென்று

    எங்களிடத்திலன்பா யியம்பிய கோபாலன் [எ]

    கணநேரமும் எம்மை விட்டுப்பிரியாத

    மனமுடையோன் யாங்கள் மயங்கவிட் டேயின்று [எ]

    மங்கையர்கள் கர்ம சங்கடந்தீர்க்கும்

    தங்கமேனியனான யெங்கள்

    ஸ்ரீகோபாலன் [எ]

    வெண்ணெய்தயிர்பால் உண்ணு

    வோனாகி நம்

    எண்ணங்கவர்ந்த மணி வண்ணன்

    ஸ்ரீகோபாலன்'' [எ]

    இந்த அழகான கீர்த்தனையை இயற்றியவர் யார் தெரியுமா? ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள். எத்தனையோ மஹான்கள் அவதரித்த தேசம் நம் தேசம். அதில் ஒருவர் மதுரையின் ஜோதி என்று புகழப்படும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள். மதுரையில் சாதாரண சௌராஷ்ட்ர நெசவாளர் குடும்பத்தில் 1843-ஆம் ஆண்டு மார்கழி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவருடைய இயற்பெயர் ராமபத்ரன்.

    படிப்பில் நாட்டம் இல்லாத இவர், மனம் முழுவதும் தெய்வீகமே ஆட்கொள்ள, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது, தந்தையின் கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறி திருப்பரங்குன்றத்திற்குச் சென்றவர். அங்கே மலைப்பகுதியில் குகையில் தவம் செய்தார். அதன் பிறகு குருநாதரைத் தேடி பரமக்குடிக்குச் சென்றார். அங்கே நாகலிங்க அடிகளிடம் யோகம் பயின்றார். 18 நாட்களில் அஷ்டமா சித்திகளை கற்றார். அமர்ந்த நிலையிலேயே பூமியிலிருந்து உயரக் கிளம்பும் சித்தியைக் கண்ட குரு நாகலிங்க அடிகளார், அவருக்கு சதானந்த அடிகளார் என்று பெயர் கொடுத்தார்.

    பலவிதமான சித்திகளோடு வாழ்ந்து கொண்டிருந்த சுவாமிகள், இவைகளால் ஞானம் பெற இயலாது என்று எண்ணி, பாண்டிய நாட்டில் ஆழ்வார்திருநகரிக்கு சென்றார். அங்கே நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஆச்சார்ய வம்ச வடபத்ரார்யர் என்கின்ற வைணவ அடியாரிடம் வைணவ நெறியைக் கற்றார். அவரிடம் பஞ்சசம்ஸ்காரம் எனும் தீட்ஷையைப் பெற்றார். ராமானுஜர் சித்தாந்தத்தில் உள்ள நூல்களான கீதா பாஷ்யம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, விஷ்ணுபுராணம் முதலியவற்றை கற்றறிந்தார்.

    பாடல்களை இயற்றி பஜனை செய்து கொண்டே யாத்திரை செய்தார். கும்பகோணத்துக்கு அருகாமையில் திருப்புவனம் என்ற ஊருக்குச் சென்ற பொழுது, அவருடைய பக்தை ஒருவர், அவருக்கு தன்னிடம் இருந்த நகைகளையும், சேலைகளையும் காணிக்கையாகக் கொடுத்தார். அந்தச் சேலையை அணிந்து கொண்டு தலையில் மகுடம் வைத்துக் கொண்டு, நடனம் ஆடினார். கிருஷ்ண பிரேம பாவத்தால் "நாயகி சுவாமிகள்" ஆனார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் போன்ற தலங்களுக்கு யாத்திரை செய்தார். ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் சௌராஷ்டிர மொழியிலும் தமிழ் மொழியிலும் எழுதினார்.

    ஒரு மாபெரும் அடியார் கூட்டமே அவரோடு ஹரி பக்தியில் திளைத்தது. 1914 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி, வைகுண்ட ஏகாதசி நாளில் பகவான் ஹரி வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே மகா விஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார். இவருடைய பிருந்தாவனம் மதுரை அழகர்கோயில் அருகிலுள்ள காதக் கிணறு என்னுமிடத்தில் இருக்கிறது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வீதியில் சுவாமிகளுடைய ``கீதா மந்திர்" என்கின்ற ஆலயம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

    ×