search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sheep killed"

    சென்னிமலை அருகே நேற்று இரவு 6 ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் பரிதாபமாக இறந்து போனது. இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமம் பனங்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் ரங்கசாமி (வயது 80). விவசாயி.

    இவர் 24 செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இவர் இரவு ஆடுகளை வீடு அருகே உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் பட்டி அமைத்து அதில் அடைத்து விடுவார்.

    நேற்று இரவு பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டில் படுக்க சென்று விட்டார். இன்று காலை 6 மணிக்கு வந்து ஆட்டு பட்டியை பார்த்தபோது ரங்கசாமி திடுக்கிட்டார்.

    அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளில் 6 ஆடுகளை ஏதோ மர்ம விலங்கு கடித்து குதறி மிக கோரமாக இறந்து கிடந்தன. மேலும் 5 ஆடுகள் மர்ம விலங்க கடித்து ரத்த காயத்துடன் கிடந்தன. அவை உயிருக்கு போராடின.

    ஆடுகள் பயந்து ஓடியதில் சில ஆடுகளுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து ரங்கசாமி கதறி அழுதார். இந்த தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    கால்நடை மருத்துவர் வந்து கடிபட்ட ஆடுகளுக்கு வைத்தியம் பார்த்தார். ஆட்டு பட்டியை சுற்றி குடியிருப்பு பகுதி உள்ளதால் மற்ற மர்ம விலங்குகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு எனவும் நாய் கடித்து ரத்தம் குடித்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் மக்கள் பேசி கொண்டனர்.

    இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. ஒரு லட்சம் இருக்கும். உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

    செஞ்சி அருகே கடித்து குதறிய காயங்களுடன் இறந்து கிடந்த 6 ஆடுகளை கொன்றது சிறுத்தையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மலைப்பகுதியின் அடிவாரத்தில் இல்லோடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆயிரம் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடு-மாடுகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார்கள்.

    இல்லோடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 37). இவர் 11 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்கு சென்று வந்ததும், அந்த ஆடுகளை விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பார்.

    நேற்று முன்தினம் மாலையில் 11 ஆடுகளையும் கொட்டகையில் அடைத்து விட்டு, சேகர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் சேகர் வந்து பார்த்தபோது 6 ஆடுகள் கழுத்து, வயிறு, கால் பகுதியில் விலங்கு கடித்து குதறியதற்கான காயங்களுடன் இறந்து கிடந்தன. மேலும் 2 ஆடுகள் காணாமல் போய் இருந்தன. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையே இந்த தகவல் காட்டுத்தீ போல அந்த கிராமம் முழுவதும் பரவியது. இதையடுத்து ஆண்களும்-பெண்களும் திரண்டு மலை அடிவாரப்பகுதிக்கு வந்தனர். இறந்து கிடந்த ஆடுகளை பார்த்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் மற்றும் வனச்சரகர் பாபு ஆகியோர் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம விலங்குகளின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். வந்து சென்றது எந்த வகையை சேர்ந்த விலங்கின் கால்தடம் என்பதை ஆராய்ந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மலைப் பகுதி அடிவாரத்தில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. வனச்சரகர்களும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. தற்போது கோடை காலம் என்பதாலும், மலைப்பகுதியில் உணவு இல்லாததாலும் விலங்குகள் மலை அடிவாரத்துக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. நள்ளிரவில் வந்தது சிறுத்தையாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த கிராம பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    ×