search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sedapatti Muthiah"

    • விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் சிறப்பாக செய்திருந்தார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு டி.குன்னத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து மேளதாளங்கள் முழங்கிட எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஏற்பாட்டின் பேரில் திருமங்கலம் அருகே முத்தப்பன்பட்டியிலுள்ள சேடபட்டியார் திடலில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி இரா.முத்தையாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,500 பேருக்கு தலா ரூ.10ஆயிரம் பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழா இன்று நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பாளராக கலந்து கொண்டார்.

    முதலில் அவர் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள சேடப்பட்டி முத்தையாவின் நினைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,500 பேருக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.

    முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு டி.குன்னத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து மேளதாளங்கள் முழங்கிட எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர். அதே போன்று முத்தப்பன் பட்டியில் பிரமாண்ட பந்தல்கள், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் புகைப்பட காண்காட்சி, வழிநெடுகிலும் வரவேற்பு, வாகனங்களை நிறுத்தும் வசதிகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தது.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் சிறப்பாக செய்திருந்தார். முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிடும் விழாவையொட்டி முத்தப்பன்பட்டி பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
    • சேடப்பட்டி முத்தையா திமுகவின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றியதாக மு.க.ஸ்டாலின் புகழாரம்

    சென்னை:

    தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையாவின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

    தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி திரு. முத்தையா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.

    நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி திரு. முத்தையா அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக 1991 – 1996 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்.

    கடந்த 2006-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் முன்னிலையில் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்ட சேடப்பட்டி திரு. முத்தையா அவர்கள், அப்போது முதல், கழகத்தின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார்.

    அண்மையில் மதுரை சென்றிருந்த போது, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி, தற்போது வந்தடைந்து வேதனையைத் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×